செவ்வாய், 20 ஜூன், 2017

சசிகலா சொல்பவருக்கே ஓட்டு! குடியரசு தலைவர் தேர்தலில் .... தினகரன் அறிவிப்பு

மின்னம்பலம் : குடியரசுத் தலைவர் தேர்தலில், சசிகலா கூறும் நபருக்கே அதிமுக ஆதரவு தெரிவிக்கும் என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் சசிகலா சொல்பவருக்கே ஓட்டு: தினகரன்அதிமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன், இன்று ஜூன் 20ஆம் தேதி சசிகலாவை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று மீண்டும் சந்திக்கும் முன்பு சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா செயல்பட முடியாத நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் அவரால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட எனக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது. என்னைக் கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாகக் கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. ஆனால், ஒரு சில அமைச்சர்கள் என்னை ஒதுக்கி வைப்பதாகக் கூறுவது அவர்களது அறியாமையையே காட்டுகிறது. அவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?

என்னைக் கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாகக் கூறும் அமைச்சர்களை நீக்கும் அதிகாரமும் துணைப் பொதுச்செயலாளர் என்கிற முறையில் என்னிடமே உள்ளது. நான் எதற்கும் பயப்படாதவன். என் மீது எந்தத் தவறும் இல்லை. ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்த வழக்காக இருந்தாலும் சரி, எந்த வழக்காக இருந்தாலும் சரி அதனைத் துணிச்சலுடன் சந்திப்பேன் என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை, தினகரன் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தினகரன் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. கடந்த முறைபோல் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் செல்லாமல், மனைவி அனுராதா மற்றும் வெங்கடேஷ் ஆகியோருடன் சென்று சசிகலாவை சந்தித்தார் தினகரன்.
அதன் பின்னர், பெங்களூருவில் இன்று 20ஆம் தேதி மாலை செய்தியாளர்களிடம் தினகரன் பேசுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை சசிகலா முடிவு செய்வார். அதையடுத்து, சசிகலா கூறும் நபருக்கே அதிமுக ஆதரவு தெரிவிக்கும். பொதுவாக ஆளுங்கட்சிக்கு, எதிர்க்கட்சியினர் நெருக்கடி கொடுப்பது வழக்கமான ஒன்றுதான் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: