திங்கள், 9 மார்ச், 2015

எங்கள் மாநிலத்தில் அணு உலை அமையுங்க: ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள் கோரிக்கை

புதுடில்லி:தங்கள் மாநிலங்களில் அணு உலைகள் அமைக்க, பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.தமிழகத்தில், கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய இடங்களில், அணு மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. கூடுதலாக பல அணு உலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.ரஷ்ய அதிபர் புடின், கடந்த ஆண்டு இந்தியா வந்திருந்த போது, 16 இடங்களில் புதிய அணு உலைகள் அமைக்க தயார் என கூறி, அதற்கான இடங்களை தேர்வு செய்யுமாறு, இந்திய அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.இடங்களை தேடிய இந்திய அணுசக்தி துறை அதிகாரிகள், அணு மின் உற்பத்தி நிலையங்கள் இல்லாத, மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களின் விருப்பத்தை கேட்டனர்.அப்போது, மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்கள், தங்கள் மாநிலங்களுக்கு அணு மின் உற்பத்தி நிலையங்கள் வேண்டாம் என தெரிவித்து விட்டன.இந்த மாநிலங்களில், முறையே, திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதாதளம் கட்சிகள் ஆட்சியில் உள்ளன.  பிழைக்க தெரிந்த கர்நாடகா/ ஆந்திரா... ஆனால் அங்கும் உதயகுமார்கள் எங்கிருந்தாவது கிளம்பி விடுவார்கள்....


ஆனால், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்கள், எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், 'எங்கள் மாநிலத்திற்கு அணு மின் உற்பத்தித் திட்டங்களை தாருங்கள்' என, கேட்டு உள்ளன.அதற்கான நிலம் மற்றும் பிற உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும், அந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளன. ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசும், கர்நாடகாவில், காங்கிரசைச் சேர்ந்த, முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசும் பதவியில் உள்ளது.

இதையடுத்து, ஆந்திராவில் கொவ்வாடா என்ற இடத்திலும், கர்நாடகாவில் கைகா என்ற இடத்தில், தலா, 200 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அணு உலைகளை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அவ்விரு மாநிலங்களில், அணு உலைகள் அமைப்பதற்கான வாய்ப்பு, வசதிகளை ஆராயுமாறு, துறை வல்லுனர்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. dinamalar.com