வியாழன், 21 மார்ச், 2013

மத்திய அரசை கவிழ்க்க / மூன்றாவது அணி அமைக்க முலாயம்சிங் திட்டம்

A weak central goverment gives rise to specter of Third Front ... say Mulayam may be working for a Third Front, from behind the scenes.
 சரியான நேரத்தில் சரியான பிரச்னைக்காக மத்திய அரசை கவிழ்க்க முலாயம்சிங் திட்டமிட்டிருப்பதாக சமாஜ்வாடி வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திமுக விலகியதை தொடர்ந்து மத்திய அரசின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. மாயாவதி மற்றும் முலாயம்சிங்கின் ஆதரவு நீடிக்கும் வரை மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. இதன் காரணமாகத்தான் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் திட்டம் எதுவும் இல்லை என பாஜ தெரிவித்துள்ளது. இதற்கிடையில் முலாயம்சிங்குக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர் பேன¤ பிரசாத் வர்மா பேசியிருப்பது காங்கிரஸ் தலைமைக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முலாயம்சிங்கிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.


தான் பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக பேனிபிரசாத் வர்மாவும் நேற்று அறிவித்தார். இருப்பினும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சமாஜ்வாடி நிபந்தனை வைத்துள்ளது. மத்திய அரசுக்கு ஆதரவு நீடிப்பது குறித்து இன்று டெல்லியில் நடைபெறும் சமாஜ்வாடி எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. இப்போதைக்கு மத்திய அரசை கவிழ்க்கும் திட்டம் முலாயம்சிங்குக்கு இல்லை எனவும், சரியான நேரத்தில், சரியான பிரச்னைக்காக மத்திய அரசை கவிழ்க்க முலாயம்சிங் திட்டமிட்டிருப்பதாகவும் சமாஜ்வாடி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகுந்த நேரத்திற்காக காத்திருப்பதால், இப்போதைக்கு மத்திய அரசுக்கு ஆதரவு தொடரும் என்ற அறிவிப்பை இன்று மாலைக்குள் முலாயம்சிங் வெளியிடுவார் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை: