ஞாயிறு, 17 மார்ச், 2013

பெண் பிறந்தால் பார்க்கக்கூட வராத தந்தை உண்டு

ஆண் பெண் பால் வேறுபாடு இயற்கையாய் அமைந்தது. இயற்கையை மாற்ற முடியாது. ஆனால், இயற்கையை எண்ணித் தளராமல், உறுதியுடன் முயன்றால் சாதனை என்பது உறுதி.
நடைமுறையில் இந்த பால் வேறுபாட்டை பச்சிளங் குழந்தையாய் இருக்கும்போது பதியச் செய்வது தவறு. பெற்றோரும் மற்றோருமே இத்தவற்றைச் செய்கின்றனர்.
பிறந்தவுடனே ஆண் என்றதும் சிறப்புக் கொஞ்சலும், சிறப்பு வசதியும், சிறப்புக் கவனிப்பும் காட்டப்படுகின்றன.
பெண் பிறந்தால் பிதுக்குகிறார்கள் உதட்டை!
பெண் பிறந்த செய்தி கேட்டால் பார்க்கக்கூட வராத தந்தை உண்டு. கள்ளிப்பால் மூலம் கதையை முடிக்கவும் சிலர் தயங்குவதில்லை. அதிலும் கொஞ்சம் இரக்கங்கொண்ட தாய், தந்தையர் குப்பையோடு சேர்த்துக் கொட்டி விடுகின்றனர். ஆக, பெண்ணைக் குப்பையாகக் கருதும் மனநிலை இன்னும் இருக்கவே செய்கிறது. இது அங்கொன்று இங்கொன்றுதானே தவிர, பொதுவாக இப்படியில்லை.
என்றாலும், உணவு கொடுக்கும்போதும், உடை கொடுக்கும்போதும், படுக்க படுக்கை தரும்போதும் ஆணுக்கு உயர்வு, பெண்ணுக்குத் தாழ்வு. இது பெரும்பாலும் நடக்கிறது.
படிப்பு என்றால் பாரபட்சம். சொத்துக் கொடுப்பதில் தயக்கம்; பலர் கொடுப்பதேயில்லை!
ஆடிப்பாடி, ஓடிப்பதுங்கி வெளியிடங்களுக்குச் சென்று விளையாட பெண்ணுக்கு அனுமதியில்லை. வீட்டுக்குள் முடக்கப்படுவதோடு, வீட்டு வேலைகளிலும் முடக்கப்படுகிறாள்.

கருத்துகள் இல்லை: