சனி, 21 ஜூலை, 2012

Sharat Pawar:மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு

சென்னை: காங்கிரஸ் உறவில் ஏற்பட்ட விரிசலையடுத்து மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்க தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. 
ஆனாலும் இன்னும் அதுகுறித்த தகவலை அக்கட்சித் தலைவர் சரத் பவார் அறிவிக்கவில்லை.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும் இடம் பெற்றுள்ளது. சரத்பவாரும் அந்த கட்சியை சேர்ந்த பிரபுல் பட்டேலும் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். மத்திய அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்த இடம், நிதியமைச்சராக இருந்த பிரணாப்புக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் ராஜினாமா செய்ததால், அந்த இடம் ஏ.கே.அந்தோணிக்கு வழங்கப்பட்டது.
இது சரத்பவாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதவிர கவர்னர், மாநிலங்களவை துணைத் தலைவர் மற்றும் நியமன உறுப்பினர்கள் நியமனத்தில் கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் மதிப்பதில்லை என்ற அதிருப்தி நீண்ட நாட்களாகவே சரத்பவாருக்கு இருந்து வந்தது.


மகாராஷ்டிர மாநிலத்தில் நீர்ப்பாசன திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.70 ஆயிரம் கோடி முறையாக செலவிடப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. அந்த துறையில் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதல்வர் பிருதிவிராஜ் சவான் அறிவித்தார்.


அந்த காலகட்டத்தில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவாரிடம்தான் நீர்ப்பாசன துறை இருந்தது என்பதால் முதல்வரின் வெள்ளை அறிக்கை அறிவிப்பு, பவாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற பல காரணங்களால் நேற்று முன்தினம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தை சரத்பவாரும், பிரபுல் பட்டேலும் புறக்கணித்தனர்.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமருக்கும், மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்க போவதாக சோனியாவுக்கும் சரத்பவார் கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்பது குறித்து சரத்பவார் வீட்டில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரபுல் பட்டேல், காங்கிரஸ் உறவில் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் கூட்டணியில் இருந்து விலக மாட்டோம் என அறிவித்தார்.

திங்கள்கிழமை கூடும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் இறுதிமுடிவு மேற்கொள்ளப்படுகிறது. காங்கிரஸுடன் இணக்கமான உறவு அமையாத சூழலில், வெளியிலிருந்து ஆதரவளிக்க சரத் பவார் கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: