சனி, 4 செப்டம்பர், 2021

பொதுத் துறை நிறுவனங்களில் மாநிலங்களுக்கும் உரிமை உண்டு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

 மின்னம்பலம் : நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குக் கொடுத்து அவற்றைப் பணமாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்து இருக்கும் நிலையில்... இதுகுறித்து தனது எதிர்ப்பை சட்டமன்றத்தில் பதிவு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கும் இது தொடர்பாக கடிதம் எழுத இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 3) இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அந்தக் கடிதத்தில், “நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள், நம் அனைவருடைய பொதுச்சொத்தாகும்.
அவற்றில் பலவும் இந்தியாவைத் தொழில்மயமான – தற்சார்புடைய நாடாக நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பவை. அத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பதற்கு, மாநிலங்களுக்குச் சொந்தமான அரசு நிலங்களோடு மக்களின் நிலங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அதனால், அந்நிறுவனங்களின் மீது மக்களுக்குப் பெருமையும் உரிமையும் உள்ளது” என்று கூறியுள்ள ஸ்டாலின்,

“இந்தப் பணமாக்கல் என்னும் நடவடிக்கை, நாட்டின் பொருளாதாரத்தின் மீதும்; தொடர்புடைய நிறுவனங்களின் பணியாளர்கள் மீதும்; இந்நிறுவனங்களைச் சார்ந்து இயங்கும் சிறு-குறு தொழில்துறை மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், “நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை வைத்துப் பார்க்கும்போது, இவ்வளவு பெரிய அளவிலான தனியார்மயமாக்கல் நடவடிக்கையை, எந்தப் பெயரிட்டு அழைத்தாலும், அது விலைமதிப்பற்ற அரசுச் சொத்துகள் ஒருசில குழுக்கள் அல்லது பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதற்கே வழிவகுக்கும். எனவே, ஒன்றிய அரசினுடைய பொதுச்சொத்துக்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யுமாறும், மேலும், இந்நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களுடனும் மாநில அரசுகளுடனும் கலந்தாலோசித்த பின்னரே இதுபோன்ற பெரிய முடிவுகளை ஒன்றிய அரசு எடுக்கவேண்டும்” என்றும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: