செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

விநாயகர் சதுர்த்தி.. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட தடை.. தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு
By Vigneshkumar  - e Oneindia Tamil News  :  சென்னை: தமிழ்நாட்டில் வரும் செப் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கத் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
முதலில் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு முதல் இரண்டு வாரங்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னரே ஊரடங்கில் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து சுகாதாரத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து வரும் செப். 15ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதில் பல புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும் அதன் கொண்டாட்டங்களுக்கும் தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் வரும் பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பது போன்ற தேவையான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து அமல்படுத்த அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாலும், தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகைக் கொண்டாட்டங்களின்போது மக்கள் அதிக அளவில் கூடி அதனால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழ்நிலையிலும், தமிழ்நாட்டில் வருகிற 15.09.2021 வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகள்

விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகள்

தற்போதுள்ள கொரோனா பரவல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு. சமய விழாக்களை முன்னிட்டு மதச்சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்தத் தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதுபோன்று சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கு அனுமதி இல்லாத நிலையில் சமய விழாக்களைப் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரை தடை

சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரை தடை

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில்' சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது. சென்னையைப் பொருத்தவரை, கடற்கரையில் குறிப்பாக சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் இச்செயல்பாட்டிற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட அனுமதி தனிநபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகள் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடைசெய்யப்படுகிறது. தனிநபர்கள், தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ சுற்றுப்புறத்திலோ வைத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளைப் பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத் துறையினரால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மீறினால் கடும் நடவடிக்கை

மீறினால் கடும் நடவடிக்கை

தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேற்குறிப்பிட்டுள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வனுமதி தனி நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை எவ்வகையிலேனும் மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விழாவிற்கான பொருட்கள் வாங்கக் கடை மற்றும் சந்தைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தவறாது முகக் கவசம் அணிவது அவ்விடங்களில் பொருட்களை வாங்க நிற்கும்போது சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மரியன்னை பிறந்த நாள் திருவிழா

மரியன்னை பிறந்த நாள் திருவிழா

சென்னை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் இதர இடங்களில் கிறித்தவ சமயத்தாரால் கொண்டாடப்படவுள்ள மரியன்னையின் பிறந்த நாள் திருவிழாவின் போது, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: