வியாழன், 2 செப்டம்பர், 2021

நடிகர் ஆர்யா தான் A1.. அவரை கைது செய்ய வேண்டும்..' பாதிக்கப்பட்ட பெண் தரப்பு வழக்கறிஞர் பேட்டி

  'Vigneshkumar -  Oneindia Tamil :   சென்னை: பண மோசடி செய்ததாக ஜெர்மனி பெண் கொடுத்த புகாரில் ஆர்யாவுக்குத் தொடர்பில்லை என போலீசார் கூறிய நிலையில், இன்று நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட நடிகர் ஆர்யாவையும் அவரது தாயார் ஜமீலாவையும் கைது செய்து விசாரிக்கும்படி ஜெர்மனி பெண் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன் வைத்தார்.
இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் வித்ஜா. இவர் தற்போது ஜெர்மனியில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன், இவர் நடிகர் ஆர்யா தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், பண மோசடி செய்துவிட்டதாகவும் புகார் கொடுத்தார்.
மேலும், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆர்யாவிடம் விசாரணை ஆர்யாவிடம் விசாரணை இந்த வழக்கை தற்போது சென்னை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் இது குறித்து நடிகர் ஆர்யாவிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். ஆர்யா நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்திருந்தார்.

அந்த பெண்ணை யாரென்றே தெரியாது என ஆர்யா தனது வாக்குமூலத்தில் தெரிவித்து இருந்தார். அதன் பிறகு திடீர் திருப்பமாகப் பண மோசடியில் ஈடுபட்டது ஆர்யா இல்லை என்றும் ஆர்யா போல நடித்து ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண்ணை ஏமாற்றியதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

இருவர் கைது இருவர் கைது இது தொடர்பாகச் சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த முகமது அர்மான் மற்றும் ஹூசைனி பையாக் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாகக் குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இதில் நடிகர் ஆர்யாவிற்கும் தொடர்பில்லை என விசாரணையில் தெரிய வந்ததாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
ஆர்யாவை ஏன் கைது செய்யவில்லை ஆர்யாவை ஏன் கைது செய்யவில்லை இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

 இந்த மனு மீதான விசாரணையில் ஜெர்மனி பெண் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட நடிகர் ஆர்யாவையும் அவரது தாயார் ஜமீலாவையும் கைது செய்து விசாரிக்கும்படி ஜெர்மனி பெண் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன் வைத்தார்.

நடிகர் ஆர்யாவிற்குத் தொடர்பில்லை என காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டதற்கு, பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வாதத்தை முன்வைத்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறை பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு ஜாமீன் மனு மீதான உத்தரவை வருகிற 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து ஜெர்மனி பெண் தரப்பு வழக்கறிஞரான ஆனந்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆர்யா போல் நடித்து மோசடியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட இருவரும் 3வது மற்றும் 4 ஆவது குற்றவாளிகள். முதல் குற்றவாளியாக நடிகர் ஆர்யா மற்றும் இரண்டாவது குற்றவாளியாக ஆர்யாவின் தாயார் ஜமீலா தான். அவர்களது பெயர் முதல் தகவல் அறிக்கையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேர்த்துள்ளனர். அவர்களை இன்னும் போலீசார் கைது செய்யவில்லை.
ஜெர்மனி பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடிகர் ஆர்யா மீது மோசடி புகார் அளித்த நிலையில், நடிகர் ஆர்யா தன்னை போல நடித்து ஏமாற்றியதாக ஒரு புகாரும் அளிக்கவில்லை.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது நடிகர் ஆர்யா எந்த புகாரும் இப்போது வரை அளிக்கவில்லை. நடிகர் ஆர்யா ஜெர்மனி பெண்ணிடம் வீடியோ காலில் பேசிய அனைத்து ஆதாரங்களையும் கேட்டு வாட்ஸ்ஆப் நிறுவனத்திடம் கடிதம் எழுதி உள்ளோம். நடிகர் ஆர்யா அனுப்பிய அனைத்து மெசேஜ்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளோம். நட்சத்திர அந்தஸ்தில் இருப்பதால் ஆர்யா தனது மேலாளர் முகமது அர்மான், ஹூசைனி வங்கிக் கணக்கில் பணத்தைப் பெற்றுள்ளார். இதற்கான ஆதாரங்களும் எங்களிடம் இருக்கிறது. எனவே உடனடியாக ஆர்யா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வழக்கறிஞர் ஆனந்தன் கூறினார்.

ஆனால் இது குறித்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தரப்பில் கூறுகையில் ",பாதிக்கப்பட்ட ஜெர்மனி பெண் அளித்த புகாரின் அடிப்படையிலேயே ஆர்யா மற்றும் அவரது தாயார் ஜமீனா ஆகியோரது பெயர்கள் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டன. ஆனால், அதன் பின்னர் நடத்திய விசாரணையில் ஆர்யாவிற்கும் இந்த பண மோசடி விவகாரத்திற்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்தது. முதல் தகவல் அறிக்கையில் சேர்த்த பெயரை எங்களால் நீக்க இயலாது. அதனால் எஃப்ஐஆருடன் கூடுதல் அறிக்கையும் (annexure) சேர்த்து விசாரணை அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். மேலும் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யும் போது ஆர்யாவின் பெயர் நீக்கப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" எனத் தெரிவித்தனர்.

 தினகரன் :  திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடி செய்ததாக ஜெர்மனி பெண் கொடுத்த புகாரில் நடிகர் ஆர்யா மீது வழக்குப்பதிவு
சென்னை: திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடி செய்ததாக ஜெர்மனி பெண் கொடுத்த புகாரில் நடிகர் ஆர்யா மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதல் தகவல் அறிக்கையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நடிகர் ஆர்யாவிடமும் விசாரிக்க வேண்டும் என்று ஜெர்மனி பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்யாவிற்கு தொடர்பில்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டதற்கு பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: