வெள்ளி, 3 செப்டம்பர், 2021

கப்பலோட்டிய தமிழர் பெயரில் ரொக்கப்பரிசுடன் விருது- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 மாலைமலர் : ப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மறைந்த நவம்பர் 18 -ம் தேதி, தியாகத் திருநாளாக அறிவித்துக் கொண்டாடப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை:  தமிழ்நாட்டில்  உள்ள சுதந்திர போராட்ட வீரர்களில் வ.உ.சி. தனித்துவம் மிக்கவர். அவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன் முதலாக கப்பல் விட்டார். அதன் காரணமாக கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார்.
வ.உ.சி.யின் 150-வது பிறந்தநாள் விழா நாளை மறுநாள் (5-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வ.உ.சி.க்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில்  இன்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 14 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இங்கே பேசியிருக்கக் கூடிய பல்வேறு கட்சியினுடைய தலைவர்கள், அயோத்திதாசருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்புக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறீர்கள், நன்றியும் தெரிவித்திருக்கிறீர்கள், பாராட்டும் தெரிவித்திருக்கிறீர்கள்.
அதேநேரத்தில் ஈஸ்வரன், வ.உ.சி.யின் 150-வது பிறந்தநாள் வருகின்றது. எனவே, அதனை அரசு விழாவாக, அவரை பெருமைபடுத்தக்கூடிய வகையில் நாம் செயலாற்ற வேண்டுமென்று ஒரு கோரிக்கையை வைத்திருந்தார்.

நான் முதல்- அமைச்சராக பொறுப்பேற்று, என்னுடைய முதல் சுதந்திர தின உரையிலேயே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும்  என்று நான் அறிவித்திருக்கிறேன். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு அவரது 150-வது ஆண்டாக வருகிற காரணத்தால், 14 அறிவிப்புகளை நான் இப்போது அறிவிக்க விரும்புகிறேன்.

* சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ. சிதம்பரனார் சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு, அங்கு அன்னாரது மார்பளவு சிலை திறந்து வைக்கப்படும்.

* தூத்துக்குடி மாநகரில், முதன்மைச் சாலையான மேல பெரிய காட்டன் சாலை, இனி ‘வ.உ. சிதம்பரனார் சாலை’ என அழைக்கப்படும்.

* தனது வாழ்நாளின் முக்கிய நாட்களை கோவை சிறையிலே கழித்த வ.உ.சிதம்பரனாரின் முழு உருவச் சிலையானது, கோயம்புத்தூர் வ.உ.சிதம்பரனார் பூங்காவில் அமைக்கப்படும்.

* செய்தித் துறையின் பராமரிப்பிலுள்ள ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் வாழ்ந்த நினைவு இல்லமும், திருநெல்வேலியில் உள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபமும் புனரமைக்கப்பட்டு, அவ்விடங்களில் அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து பயனடையும் வகையில், ஒலி ஒளி காட்சி அமைக்கப்படும்.

* வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படத்தினை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், நவீன டிஜிட்டல் முறையிலே அது வெளியிடப்படும்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் வ.உ. சிதம்பரனார் பெயரில் புதிய ஆய்விருக்கை ஒன்று அமைக்கப்படும்.

* வ.உ. சிதம்பரனார் எழுதியுள்ள அனைத்து புத்தகங்களும் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

* திருநெல்வேலியில் வ.உ. சிதம்பரனார் மற்றும் மகாகவி பாரதியார் படித்த பள்ளிக்குத் தேவையான கூடுதல் வகுப்பறைகள், கலை அரங்கம் மற்றும் நினைவு நுழைவு வாயில் ரூ1.05 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் தொடர்பானத் துறைகளில் ஈடுபட்டு, சிறந்த பங்காற்றி வரும் தமிழர் ஒருவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படும். விருதுத் தொகையாக ரூ.5 லட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

* கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மறைந்த நவம்பர் 18 -ம் தேதி, தியாகத் திருநாளாக அறிவித்துக் கொண்டாடப்படும்.

* இந்த ஆண்டு, செப்டம்பர் 5, 2021 முதல் செப்டம்பர் 5, 2022 வரை, தூத்துக்குடியிலும், திருநெல்வேலியிலும் உருவாகும் அரசு கட்டிடங்களுக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்படும்.

* பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்து பயனடையும் வகையில், போக்குவரத்துத் துறையின் சார்பில் பேருந்து ஒன்றில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும்.

* தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வ.உ. சிதம்பரனார் குறித்த இணைய வழி கருத்தரங்கம் நடைபெறும்.

* தமிழ் நிகர்நிலைக் கல்விக் கழகத்தின் வாயிலாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் எழுதிய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் ஆகியவை முழுவதும் இணையத்திலே மின்மயப்படுத்தி வெளியிடப்படும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

கருத்துகள் இல்லை: