ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

விழுப்புரம் அருகே தாயே குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வைரல் காணொளி -

BBC : ஒரு தாயே குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வைரல் காணொளி – தாயை பிடிக்க தனிப்படைகுழந்தை துன்புறுத்தப்படும் காணொளி ஆறு மாதங்களுக்கு பிறகு வெளியாகியுள்ளது
விழுப்புரத்தில் தாயே தனது குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது தொடர்பாக விழுப்புரம் போலீசார் குழந்தையின் தாய் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பெண் தற்போது ஆந்திர மாநிலத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்த வடிவழகன் (வயது 26) கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும்,
ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த துளசி (வயது 23) என்ற பெண்ணிற்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு நான்கு வயதிலும், இரண்டு வயதிலும் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றன.
இவர்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியுள்ளது. கணவன்-மனைவி இருவருக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படும்போது துளசி தனது இரண்டு வயது இளைய மகனை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் குழந்தையை அடிப்பதை அவருடைய அலைபேசியில் வீடியோவாக யாருக்கும் தெரியாமல் எடுத்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி அன்று கணவன் வடிவழகன், மனைவி துளசி இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அப்போது கணவரை அச்சுறுத்தும் வகையில் துளசி தன் இரண்டு வயது இளைய மகனை வாயில் அடித்து காயம் ஏற்படுத்துவதை தனது அலைபேசியில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார்.
 
பிறகு குழந்தை கீழே விழுந்து அடிபட்டுவிட்டதாகக் கணவரிடம் கூறி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர்.


இந்த சம்பவம் நடைபெற்று சுமார் ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், நேற்று மாலையிலிருந்து சமூக வலைத்தளத்தில் பெண் ஒருவர் குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் நான்கு வீடியோக்கள் வேகமாகப் பரவின.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து, குழந்தையை சித்திரவதை செய்யும் பெண்ணை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தனர்.

இதற்கிடையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண் யாரென தெரியவந்தது. தன்னுடைய குழந்தையை அவரே சித்ரவதை செய்துள்ளார் என்பதும் உறுதியானது.

குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வீடியோக்களை சில தினங்களுக்கு முன்பு கணவர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து அப்பெண்ணின் கணவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின்‌ அடிப்படையில் சித்ரவதை செய்த தாயின் மீது நான்கு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணை செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தொடர்புகொண்டு இந்த சம்பவம் பற்றி கேட்டது ..அப்போது காவல் துறையினர் தரப்பில் கூறியதாவது, “கணவர் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.

அதன் காரணமாக தற்போது அப்பெண் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருக்கும் அவருடைய தாய் வீட்டில் வசித்து வருகிறார்.”
 
“தாய் அவரது குழந்தையைத் தாக்கும் சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்துள்ளது. ஆனால் இது பற்றிய காணொளி காட்சி தற்போது தான் வெளியாகியுள்ளது.

கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த பெண் மீது குழந்தையை அடித்து சித்திரவதை செய்த காரணத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.”

“தற்போது அப்பெண் ஆந்திராவில் இருப்பதால் தனிப்படையமைத்து இந்த வழக்கில் புலன்விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த இரண்டு குழந்தைகளும் தந்தை வடிவழகனிடம் பாதுகாப்பாக இருக்கின்றனர், ” எனக் காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: