திங்கள், 30 ஆகஸ்ட், 2021

சீமான் பாஜகவின் பி.டீம் : கே.டி.ராகவன் விவகாரத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி

tamil.indianexpress.com : பாஜகவை சேர்ந்த கே.டி.ராகவன் சர்சசை குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைபாளர் சீமானுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்
பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கே.டி.ராகவன். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் குறித்து சர்ச்சை வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவியது. பாஜகவை சேர்ந்த நிர்வாகி ஒருவரே இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த குற்றச்சாட்டை மறுத்த கே.டி.ராகவன், தமிழக பாஜகவில் தனது பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் கட்சியிலும் என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் என்னை பற்றி நன்றாக தெரியும். இந்த வீடியோ முழுவதும் சித்தரிக்கப்பட்டவை. இந்த பிரச்சனையை சட்டப்படி சந்திப்பபேன் தர்மம் வெல்லும் என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அந்த வீடியோ வெளியான யூடியூப் தளம் முடக்கப்பட்ட நிலையில், வீடியோவை வெளியிட்ட பாஜக நிர்வாகி கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்த இரு தினங்களில் வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் பேசிய தொலைபேசி உரையாடல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தமிழக பாஜகவில் தற்போது பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், கட்சி மேலிடம் இது தொடர்பாக என்ன நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறது என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

இந்நிலையில் இந்த சர்ச்சை வீடியோ பேசியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கே.டி.ராகவனுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் தனது கருத்தை கூறியுள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ராவணன் குடி மாயோன் பெருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் கே.டி.ராகவன் சர்ச்சை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை படம் படிப்பது தவறு. உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார். சட்டசபையில் ஆபாசபடம் பார்த்தார்கள் அது தவறு ஆனால் இவர் தனது வீட்டின் அறையில் தனிப்பட்ட முறையில் செய்ததை வீடியோ எடுத்து வைத்துகொண்டு காட்டுகிறார்கள். அவரின் அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்தவரைத்தான் கைது செய்ய வேண்டும் என்று பேசிய சீமான்,  யார் யாரோடோ பேசுவதை ஒட்டு கேட்டு என்ன சாதிக்க போகிறீகள் என்று என்று கேட்டுள்ளார். சீமானின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது அறிக்கையில்,

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை கேள்வி கேட்கும் சமூக சரியாகத்தான் இருக்கிறது. பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை சுரண்டலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் திரு சீமானின் செயல்பாடுதான் வெட்கக்கேடானது. சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் இவர் இப்படிப் பொறுப்பில்லாமல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை, சுரண்டலை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

நாம் தமிழர் கட்சியில் இருக்கும் கள்ளமில்லாத இளைஞர்களின் மனதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சரியென்ற மனநிலையை சீமான் உருவாக்குகிறார் இது ஒட்டுமொத்த பெண்களுக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஆபத்தாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது பாஜகவிடமிருந்து மட்டுமல்ல இப்படிப்பட்ட ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க, ஆபத்தான செயல்பாடுகளை ஆதரிக்கும் திரு சீமான் போன்றவர்களிடமும் பெண்களும், தமிழ்சமூகமும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

இவர்கள் எல்லாம் பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, கண்ணியம் பற்றி துளிகூட கவலைப்படாதவர்கள், பெண்களை பாலியல்ரீதியான வன்முறைக்கு, ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதை ஆதரிப்பவர்கள். காலம் காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குற்றங்கள், ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன அதற்காக அவையெல்லாம் சரியென்று ஆகிவிடுமா? பாலியல் குற்றவாளிகள் எல்லாம் நிரபராதிகள் ஆகிவிடுவார்களா?

எப்படி காலங்காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடக்கின்றனவோ அதேபோல அதற்கு எதிரான போராட்டங்களும் நடந்துகொண்டுதானிருக்கிறன என்பதை திரு சீமான் நினைவில் அந்த போராட்டங்களின் பயனாகவே இன்று பெண்கள் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களது வெற்றிகரமான பங்களிப்பை செலுத்தி வருகிறார்கள்.

பல்வேறு உளவியல், சமூக, பொருளாதாரத் தடைகளைத்தாண்டி பொதுவாழ்விற்கு வரும் பெண்கள் கண்ணியத்துடனும், மரியாதையுடனும்,பாதுகாப்புடனும் நடத்தப்படவேண்டும் அப்படியில்லாமல் பெண்களிடம் முறைகேடாக நடந்துகொள்பவர்கள் கண்டிக்கப்படவேண்டும், தண்டிக்கப்படவேண்டும் இதுதான் ஒரு நாகரிகமான சமூகத்தின் கடமை அந்த கடமையைத் தான் தமிழ்சமூகம் சரிவர செய்துவருகிறது.

பெண்களிடம் முறைகேடாக நடந்துகொள்ளும் அயோக்கியர்களையும், அவர்களை அப்பட்டமாக ஆதரிப்பவர்களையும் தமிழ் சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இதுதான் சீமான் போன்றவர்களுக்கு உறுத்துகிறது. திரு சீமான் மீதும் கடந்த காலத்தில் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது குற்றத்தை மறைக்கவே சீமான் ராகவனின் பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது மேலும் சீமான் பாஜகவின் பி டீம் (B Team) என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

எப்படியிருந்தாலும் திரு. சீமானின் இந்த செயல் வெட்கக்கேடானது. சீமான், கேடி. ராகவன் போன்றவர்களின் வளர்ச்சி தமிழ்நாட்டு பெண்களுக்கு பேராபத்தை விளைவிக்கும். தமிழகம் குறிப்பாக தமிழகத்தின் எதிர்காலமான இளைஞர்களும், மாணவர்களும் இப்போதாவது சீமானின் பொய் முகத்தைப் புரிந்து கொண்டு அவரைப் புறக்கணிக்க வேண்டும். அதுவே நாம் தமிழ்ச் சமூகத்திற்கு செய்யும் பெருந்தொண்டு என்று ஜோதிமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: