திங்கள், 7 நவம்பர், 2016

வக்கீல் லக்ஷ்மி சுதா கொலை .. ஒருவர் கைது .. தி.நகரில் ..

வக்கீல் லட்சுமி  குத்திக் கொலையில் ஒருவர் கைது .
தியாகராயர் நகரில் வசித்து வந்த பெண் வக்கீல் லட்சுமி சுதா கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இன்சூரன்ஸ் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போலீசாரிடம் தான் கொலை செய்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை மேற்கு மாம்பலம், தேவன் காலணியை சேர்ந்தவர் 58 வயதான லட்சுமி சுதா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவர் இறந்து 3 நாட்கள் ஆகியும் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. பின்னர், அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில், லட்சுமி சுதா, ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார் என்பது தெரியவந்தது. இவருக்கு மகன் இருப்பதும், அவர் பெங்களூரில் வசித்து வருவதும் தெரிய வந்தது.

ஆனால், இவர் எதற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து தெளிவாக போலீசாருக்கு தெரியவில்லை. இதனால், 6 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை போலீசார் தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து, லட்சுமி சுதா வீட்டில் வேலை செய்தவர் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அப்போது, வக்கீலை பார்க்க ஒரு நபர் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வார் என்ற தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனால், லட்சுமி சுதாவிற்கு யார் யாருடன் தொடர்பு இருந்தது என்பது குறித்தும் அவர் நடத்தும் வழக்கு விவரங்கள் குறித்தும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர்.

இதில், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் லட்சுமி சுதா சட்ட ஆலோசகராக பணியாற்றினார் என்பதும், அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நொளம்பூரை சேர்ந்த 35 வயதான கார்த்திகேயன் என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வருவார் என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கார்த்திகேயனிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, கார்த்திகேயன், இன்சூரன்ஸ் கம்பனியின் சட்ட ஆலோசகராக இருந்த லட்சுமி சுதாவிடம் அடிக்கடி வழக்கு தொடர்பாக பேசி வந்ததையும், அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரிடையே நட்பு உருவானததையும், அந்த நட்பு பின்னர் காதலாக மாறியதை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, கார்த்திகேயன் திடீரென வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனை லட்சுமி சுதாவில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விஷயம் கார்த்திகேயனின் மனைவிக்கும் தெரிந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்குள்ளும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், கார்த்திகேயன் சம்பவத்தன்று வக்கீல் லட்சுமி சுதா வீட்டிற்கு வந்துள்ளார்.
அவரிடம் இருவரும் பிரிந்து விடுவது குறித்து பேசியுள்ளார். இதற்கு வக்கீல் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லட்சுமி சுதாவை குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் எதுவும் தெரியாதது போல் அங்கிருந்து ஓடிவிட்டிருக்கிறார்.
மேலும், தன் மகனுக்கு மொட்டை அடிக்க நேற்று விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள கோயில் ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து போலீசார் கார்த்திகேயனை கைது செய்துள்ளனர். விசாணையின் போது கார்த்திகேயன், கொலை செய்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். -அரவிந்த்  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: