வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

மகாராஷ்ட்ராவில் நிலச்சரிவில் கிராமமே புதைந்தது பலியானவர்கள் சுமார் முன்னூறு ?

புனே, மராட்டிய மாநிலத்தில் நிலச்சரிவால் கிராமமே அழிந்தது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்தது. மீட்புப்பணிகளை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் நேரில் பார்வையிட்டார்.
நிலச்சரிவு
மராட்டிய மாநிலம், புனே மாவட்டம் ஆம்பேகாவ் தாலுகாவில் மலையடிவாரத்தில் உள்ள மாலின் கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் 44 வீடுகளும், ஒரு கோவிலும் மண்ணோடு மண்ணாக புதைந்து போயின. அந்தக் கிராமம், இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த இயற்கைப் பேரிடரில் குறைந்தது 300–க்கும் மேற்பட்டோர் புதைந்து போய் விட்டனர்.

2–வது நாளாக மீட்பு பணி இந்த நிலச்சரிவு குறித்த தகவல் அறிந்ததும், பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு வரை 17 உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று இரண்டாவது நாளாக மீட்பு பணி நடந்தது.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. உருண்டு வந்த பாறைகளும் வீடுகளோடு புதைந்து கிடக்கின்றன. மரங்களும் அடியோடு சாய்ந்து கிடக்கின்றன. அவ்வப்போது மழையும் குறுக்கிட்டு வருவதால் மீட்பு பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
பலி எண்ணிக்கை 51 மீட்பு பணியில் பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மண்ணோடு மண்ணாக புதைந்தவர்களை மீட்க பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை. மீட்புப் படையினருடன் சுற்றுப்புறங்களை சேர்ந்த ஏராளமான கிராம மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த இயற்கைப் பேரிடரில் பலியானவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 15 பேர் பெண்கள், 5 பேர் குழந்தைகள்.
31 உடல்கள் மீட்பு நேற்று 14 உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 31 ஆகி உள்ளது. உடல்கள், பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மீட்புப் பணியின்போது, அதிர்ஷ்டவசமாக 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த டாக்டர்கள் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் சுற்றுவட்டார அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் புனே மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்புப் பணி முடிய இன்னும் 2 நாட்கள் தேவைப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்.
ராஜ்நாத் சிங் பார்வையிட்டார் இதற்கிடையே, நிலச்சரிவு ஏற்பட்ட மாலின் கிராமத்துக்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று நேரில் வந்து மீட்புப்பணிகளை பார்வையிட்டார். மீட்புப் பணிகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தலா ரூ.2 லட்சம் நிவாரணம் நிலச்சரிவில் 44 வீடுகளும், ஒரு கோவிலும் மண்ணுக்குள் புதைந்து உள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் அடுத்த வாரிசுகளுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து இந்த நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
மிகப்பெரிய அளவில் மீட்புப்பணி நடந்து வருகிறது. மீட்புக் குழுவினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எங்கள் அரசு செய்யும். மீட்புப்பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
முதல்–மந்திரி தகவல் மராட்டிய முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவான் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘மாலின் கிராமமே முழுமையாக அழிக்கப்பட்டு விட்டது. பலியானவர்களின் உடல்கள், அவர்களது உறவினர்களின் விருப்பத்தின்படி தகனம் செய்யப்படும்’’ என கூறினார் dailythanthi.com

கருத்துகள் இல்லை: