செவ்வாய், 22 ஜனவரி, 2013

சிவகிரியில் கல்லூரி மாணவி எரித்துக்கொலை 1000 கடைகள் அடைப்பு

சிவகிரியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தையொட்டி 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே கோட்டப்புதூரை சேர்ந்த விவசாயி நல்லசிவத்தின் இளைய மகள் நந்தினி (19).  கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த இவரது சடலம் பாதி எரிந்த நிலையில் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பின்பகுதியில் நேற்று (திங்கள்கிழமை) கிடந்தது.உடலில் உள்ள காயங்களை பார்க்கும்போது யாரோ சிலர் இவரை, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக சிவகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இக்கொலை சம்பவத்தை கண்டித்து சிவகிரி, அம்மன் கோவில், சின்னியம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் செவ்வாய்க் கிழமை அடைக்கப்பட்டன.
மாணவியின் உறவினர்கள், சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், பெண்கள், அதிமுக தவிர பிற அரசியல் கட்சி பிரமுகர்கள் சுமார் 1,000 பேர் சிவகிரி சந்தைமேடு பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை திரண்டனர்.  பின்னர் அங்கிருந்து அம்மன்கோவில், பாலமேடு, சிவகிரி கடை வீதி, தேர் வீதிகள் வழியாக தீரன் சின்னமலை சிலை வரை அமைதி பேரணியை நடத்தினர்.
பேரணியின் முடிவில் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த பேரணியில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.இது குறித்து சிவகிரி போலீஸார் கூறியபோது, நந்தியின் செல்போன் எண்ணில் தொடர்பில் இருந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். வேறு சிம்கார்டுகள் ஏதும் பயன்படுத்தினாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

கருத்துகள் இல்லை: