ஞாயிறு, 20 ஜனவரி, 2013

என் மகளை கொன்ற சவூதியின் ஒரு செப்பு காசுகூட வேண்டாம் ரிசானாவின் தாயார் கவலை

எனது மகளை படுகொலை செய்த சவூதி அரேபியாவிடமிருந்து எனக்கு ஒரு செப்புக் காசு கூட வேண்டாம் என்று ரிசானாவின் தாயார் தெரிவித்துள்ளார்
சவூதி அரேபியாவின் பணத்தைப் பெற்று ரிசானாவை அகெளரவப்படுத்தாதீர்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.
தனது மகளை படுகொலை செய்த சவூதி அரேபிய அரசாங்கத்திடமிருந்தோ அந்நாட்டைச் சேர்ந்த எந்தவொரு நபரிடமிருந்தோ பண உதவியைப் பெறுவதற்கு தாம் தயாராக இல்லையென ரிசானாவின் தாயாரான அகமட் செய்யது பரீனா தெரிவித்தார்.
இப்போது எங்கள் குடும்பத்துக்காக வீடொன்றை நிர்மாணித்துக் கொடுப்பதற்குப் பல அமைப்புக்கள் முன்வந்துள்ளன என்றும், சவூதி அரேபியாவிலிருந்து எங்களுக்கு கொடுக்கப்படும் ஒரு செப்புக்காசைக் கூட எடுத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வராதீர்கள் என்றும் அந்தத் தாய் வேதனையுடன் தெரிவித்தார்.
ரிசானாவினால் தற்செயலாக மரணத்தை எதிர் நோக்கிய குழந்தையின் தாயிடம் ரிசானாவை மன்னிக்குமாறு நாம் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டமையைச் சுட்டிக்காட்டிய ரிசானாவின் தாயார், அல்லாவின் ஆணைப்படியே அனைத்தும் நடந்து முடிந்துள்ளது. அதனால் அதைப்பற்றி நாம் வேறொன்றும் கூறுவது நல்லதல்ல என்றும் சொன்னார்.
தற்போது மத்திய கிழக்கு நாடுகளின் தொலைக்காட்சி சேவைகளில் ரிசானாவின் இளைய சகோதரியின் படத்தை ரிசானாவின் படமாகக் காட்டி எங்களை வேதனைப்படு த்துகிறார்கள் என்று தெரிவித்த அவர், இத்தகைய பொய்யான தகவல்களை வெளியிட்டு ரிசானாவின் நற்பெயரை அகெளரவப்படுத்தாதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை: