திங்கள், 14 ஜூன், 2010

முதல்வர் கருணாநிதிக்கே பிரதமர் கடிதம் !

புதுடில்லி: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகை தொடர்பாக பிரதமருக்கும், அவருக்கும் இடையே நடந்த பேச்சு விவரங்களை கடிதம் மூலம் முதல்வர் கருணாநிதிக்கு மன்மோகன்சிங் அனுப்பியுள்ளார். கடந்த வாரம் இலங்கை அதிபர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இவருடைய வருகைக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆர்ப்பாட்டம், பேரணி என பேராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு முன்னதாக இலங்கை தமிழர்கள் மீள்குடியேற்றம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். இந்த கடிதத்திற்கு பிரதமர் பதில் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது :
ராஜபக்சேவுடன் இலங்கை தமிழர் மீள்குடியேற்றம் தொடர்பாக வலியுறுத்தி கூறினேன். ஏற்கனவே மீள் குடியேற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் 47 ஆயிரம் தமிழர்கள் இந்த ஆண்டு இறுதிக்குகள் மீள் குடியமர்த்தப்பட்டு விடுவர் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். மேலும் இந்தியா சார்பில் 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மீள் குடியமர்த்தப்பட்ட தமிழர்களுக்கு உரிய வாழ்வாõதர பிரச்னைகளுக்கு உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டேன்.
இலங்கையில் சிறுபான்மை இனத்தவர் குறிப்பாக தமிழர்கள் மதிப்புடனும் , கண்ணியத்துடனும் நடத்தப்பட அதிகாரப்பகிர்வு அவசியம் குறித்தும் அறிவுறுத்தியுள்ளேன். தமிழர்கள் சொந்தமாக உழைத்து வாழ இந்தியா தரப்பில் தனியாக திட்டங்கள் தீட்டி செயல்படும் என்றும் தெரிவித்துள்ளேன். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: