BBC News தமிழ் : தெற்காசியாவில் முதன்முறையாக, சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் நடைபெறுகிறது. ஃபார்முலா 4 (F4) இந்தியன் சாம்பியன்ஷிப், இந்தியன் ரேசிங் லீக் (IRL- ஐஆர்எல்) என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இவைதவிர ஜேகே டயர் ஜூனியர் தேசிய போட்டிகளும் நடைபெறுகின்றன.
கார் பந்தயங்களுக்கு இடையில் பொழுதுபோக்கு கார் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
இப்போது நடைபெறுவது ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் கார் பந்தயத்தின் 2ஆம் சுற்று போட்டிகள். முதல் சுற்று போட்டிகள் ஒரு வாரத்திற்கு முன்பாக (ஆகஸ்ட் 24 மற்றும் 25) சென்னையை அடுத்த  இருங்காட்டுக் கோட்டையில் நடைபெற்றன.  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், ஆந்திராவைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்றும் இணைந்து ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துகின்றன. சென்னை தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பாதையில் இது நடத்தப்படுகிறது.