வியாழன், 7 அக்டோபர், 2021

“கலைஞர் ஏன் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டு தினமாக அறிவித்தார்?” - பொய்ப் பிரசாரங்களை தகர்க்கும் கட்டுரை!

கலைஞர் செய்திகள்  : கலைஞர் ஏன் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டு தினமாக அறிவித்தார் என்பதை விவரிக்கிறது இக்கட்டுரை.
தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாளா அல்லது சித்திரை முதல் நாளா என்ற ஒரு விவாதம் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகின்றது. தமிழறிஞர்கள், தை 1-ம் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்று வலியுறுத்தி வந்தனர். அதனையடுத்து, 2008ம் ஆண்டு தை 1-ஐ தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு, காழ்ப்புணர்ச்சியில் அதனை ரத்து செய்தது.
மறைமலை அடிகளார், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், பேராசிரியர் கா.நமசிவாயர், இ.மு.சுப்பிரமணியனார், மு.வரதராசனார், இறைக்குருவனார், வ.வேம்பையனார், பேராசிரியர் தமிழண்ணல், வெங்காலூர் குணா, கதிர். தமிழ்வாணனார், சின்னப்பத்தமிழர், கி.ஆ.பெ.விசுவநாதர், திரு.வி.க, பாரதிதாசனார், கா.சுப்பிரமணியனார், ந.மு.வேங்கடசாமியார், சோமசுந்தர பாரதியார், புலவர் குழுவினர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு என்று எடுத்துரைத்தனர்.

மலையகத்தில் கோ.சாரங்கபாணியார், சா.சி.குறிஞ்சிக்குமரனார், அ.பு.திருமாலனார், பேராசிரியர் இர.ந. வீரப்பனார், கம்பார் கனிமொழி குப்புசாமி, மணி. வெள்ளையனார், திருமாறன், இரெ.சு.முத்தையா, இரா.திருமாவளவனார், இர.திருச்செல்வனார் உள்ளிட்ட 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி விவாதித்து ஆரிய திணிப்பான சித்திரை வருடப்பிறப்பினை விடுத்து தை முதல் நாளே தமிழாண்டின் துவக்கம் என்று முடிவு செய்து அறிவித்தார்கள்.

இன்று பிறக்கும் புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டு அல்ல என்பதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டும்.

1. பிரபவ, 2. விபவ, 3. சுக்கில, 4. பிரமோதூத, 5. பிரஜோத்பத்தி, 6. ஆங்கீரஸ, 7. ஸ்ரீமுக, 8. பவ, 9. யுவ, 10. தாது, 11. ஈஸ்வர, 12. வெகுதான்ய, 13. பிரமாதி, 14. விக்கிரம, 15. விஷு, 16. சித்ரபானு, 17.சுபாணு, 18. தாரண, 19. பார்த்திப, 20. விய, 21. சர்வகித்து, 22.சர்வதாரி, 23. விரோதி, 24. விக்ருதி, 25. கர, 26. நந்தன, 27. விஜய, 28. ஜய, 29. மன்மத், 30. துர்முகி, 31. ஹேவிளம்பி, 32. விளம்பி, 33. விகாரி, 34. சார்வரி, 35. பிலவ, 36. சுபகிருது, 37. சோபகிருது, 38. குரோதி, 39. விசுவாசு, 40. பராபவ, 41. பிலவங்க, 42. கீலக, 43. செமிய, 44. சாதரண, 45. விரோதிகிருது, 46. பரிதாபி, 47. பிரமாதீச, 48. ஆனந்த, 49. ராஷஸ, 50. நள, 51. பிங்கள, 52. காளயுக்தி, 53. சித்தாத்திரி,54. ரெத்திரி, . 55. துன்பதி, 56. துந்துபி, 57. ருத்ரோகாரி, 58. ரக்தாஷி, 59. குரோதன, 60. அக்ஷய,

இந்த அறுபதில் எது தமிழ் வார்த்தை யாராவது சொல்ல முடியுமா?

தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரமிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாகப் பிரித்து வைத்திருந்தார்கள். வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று அவற்றை அழைத்தார்கள்.

அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1,440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.

தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

1 நாழிகை - 24 நிமிடங்கள்

60 நாழிகை - 1,440 நிமிடங்கள்

இதனை இன்றைய கிருத்துவ கணக்கீட்டின் படி பார்த்தால்

1,440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்

24 மணித்தியாலங்கள் - 1 நாள்)

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

    இளவேனில் - (தை-மாசி)

    முதுவேனில் - (பங்குனி - சித்திரை)

    கார் - (வைகாசி - ஆனி)

    கூதிர் - (ஆடி - ஆவணி)

    முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)

    பின்பனி (கார்த்திகை - மார்கழி)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை- வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.

சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தை மாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.

காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்.

இங்கே ஒரு மிக முக்கியமான செய்தியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.

தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினை கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
“கலைஞர் ஏன் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டு தினமாக அறிவித்தார்?” - பொய்ப் பிரசாரங்களை உடைக்கும் கட்டுரை!

தமிழர்கள் நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்துப் பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்.

நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு

அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே

அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழனுக்கு

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

- பாவேந்தர் பாரதிதாசன்

அப்படி இந்த நாளை கொண்டாடித்தான் ஆகவேண்டுமெனில் சித்திரை திருநாளாகக் கொண்டாடுங்கள். பகுத்தறிவு என்பது கடவுளை மறுப்பது மட்டும் அல்ல, பகுத்து அறிவது நான் பகுத்தறிவு.

(இக்கட்டுரையை எழுதியவர் யார் என்று சரிவரத் தெரியவில்லை. இருப்பினும் தமிழ்ச் சமூகத்திற்கு மிகப்பெரிய உண்மையை நெற்றிப்பொட்டில் அறைவது போல எழுதியுள்ளதன் பொருட்டு பகிரப்படுகிறது.) பகிர்வு உதவி : வசந்தகுமார்

கருத்துகள் இல்லை: