வியாழன், 7 அக்டோபர், 2021

வாக்காளர் பட்டியலில் வடமாநிலத்தவர்கள்! ஆர்.எஸ்.பாரதி புகார்!

வாக்காளர் பட்டியலில்  வடமாநிலத்தவர்கள்: ஆர்.எஸ்.பாரதி புகார்!

மின்னம்பலம் :  நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், 5000 வட மாநில தொழிலாளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 74.37% வாக்குகள் பதிவான நிலையில், நாளை மறு நாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் 5000க்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
9.10.2021 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக நேற்று (06.10.2021) காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் தொகுதியில் உள்ளடங்கிய திருப்பெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திலும் வெளியிட்டுள்ள வாக்காளர் துணைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும் தற்காலிகமாகக் கட்டிட பணியாற்ற வந்திருக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வருகிறது.

மேலும் இந்த வாக்காளர்கள் அனைவரும் போலியானவர்கள் என்பது தெரிந்துவிடும் என்பதால் இந்த துணை வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களுடைய புகைப்படம் இணைக்காமல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல்கட்ட தேர்தல் நேற்று 6.10.2021 முடிவடைந்த நிலையில், நேற்று வெளியிடப்பட்டுள்ள துணை வாக்காளர் பட்டியல் இரண்டாம் கட்ட தேர்தலுக்கு சட்டப்படி ஏற்புடையதல்ல. எனவே இத்தகைய போலி வாக்காளர்களுக்கு வாக்கு அளிக்க உரிமை இல்லை என்றும், அவர்களுக்கு வாக்கு அளிக்க அனுமதிக்கக்கூடாது என்பது சட்டத்தின் நிலைப்பாடு.

இந்த துணைப் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் அ.தி.மு.க.வினரால் வேண்டுமென்றே திட்டமிட்டு இணைக்கப்பட்டுள்ள போலி வாக்காளர்கள் ஆவார்கள். எனவே, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994 மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்து தேர்தல் விதிமுறைகள் 1995க்கு முரணாக எந்தவித ஆதாரமும் இல்லாமல், புகைப்படமும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ள இந்த துணைப் பட்டியலில் உள்ளடக்கிய போலி வாக்காளர்கள் அனைவரையும் வருகின்ற 9.10.2021 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க தடைவிதித்து, நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும்.

இதுகுறித்து அனைத்து மேல் நடவடிக்கைகளும் சட்டப்படி எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா


கருத்துகள் இல்லை: