செவ்வாய், 2 செப்டம்பர், 2014

உற்பத்தி அதிகரிப்பின் பெருமைகள் அனைத்தும் காங்கிரசையே சேரும்

நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிபரங்கள் திங்கள்கிழமை வெளியானது. இதில், கடந்த 2 ஆண்டுகளாக தேக்க நிலை கண்டிருந்த இந்திய பொருளாதாரம் மிக வேகமாக ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மீட்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது.மேலும், 2014-2015 ஆம் நிதி ஆண்டிற்கான முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்த்த அளவையும் தாண்டி 5.7 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த புள்ளிவிபரங்கள் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜி.டி.பி.) அளவு 5.7 சதவீதமாக அதிகரித்திருப்பதற்கு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கொள்கைகளே காரணம். இந்தப் பெருமைகள் அனைத்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியையே சேரும்'' என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, மே 26ஆம் தேதிக்கு பிறகு செயல்படுத்தப்பட்ட திட்டத்தால், ஜூன் 30ஆம் தேதிக்குள் பயன் ஏற்பட்டுள்ளது என்று ஏதாவது ஒரு திட்டத்தின் பெயரை மோடி அரசால் தெரிவிக்க முடியுமா?. நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகளே காரணமாகும்.

இதனால், இந்தப் பெருமையெல்லாம், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கே சேரும். எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முரட்டுத் தனமாக நடப்பதை நிறுத்திக் கொண்டுவிட்டு, இந்தப் பெருமை யாருக்கு சேர வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். nakkheeran,in

கருத்துகள் இல்லை: