வியாழன், 19 ஜனவரி, 2012

மருத்துவமனையாக மாற்ற மத்திய அரசிடம் அனுமதி பெறுவீர்களா?- உயர்நீதிமன்றம்


New Assembly
சென்னை: புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று மனுதாரர்களின் வக்கீல் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறப்படுமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அரசினர் தோட்ட வளாகத்தில் பிரமாண்டமான அளவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் புதிய சட்டசபையை கடந்த திமுக ஆட்சி கட்டியது. அங்கு சட்டசபையும் இடமாற்றம் செய்யப்பட்டு கூட்டமும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் புதிய தலைமைச் செயலகத்தையும், சட்டசபையையும் மூட உத்தரவிட்டு விட்டது. சட்டசபையும், தலைமைச் செயலகமும் தொடர்ந்து புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலேயே நீடிக்கிறது.

மேலும், புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றப் போவதாகவும், அங்கு அதி உயர் சிறப்பு மருத்துவமனை அமையும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதுதொடர்பான பணிகளையும் அரசு முடுக்கி விட்டுள்ளது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்று நீதிபதிகள் முருகேசன், ஜனார்த்தன ராஜா முன்னிலையி்ல் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில்,

புதிய தலைமைச் செயலகத்தை சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவதற்கு முன்பு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி இல்லாமல் மருத்துவமனை அமைக்க கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்தார்.

இதுகுறித்து விளக்கம் அளிக்க அவகாசம் தேவை என்று அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து புதிய தலைமைச் செயலகத்தில் மருத்துவமனை அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி வாங்கப்படுமா என்பது குறித்து நாளை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நாளைக்குத் தள்ளி வைத்தனர்.

கருத்துகள் இல்லை: