செவ்வாய், 8 செப்டம்பர், 2020

`இந்தி தெரியாது’ டி-ஷர்ட் பின்னணி .. கனிமொழி டிசைன் செய்த டி ஷர்ட்கள்

வே.கிருஷ்ணவேணி- vikatan :
“யுவன் சார் போட்ட போட்டோ முதலில் வைரல் ஆனது. ஆனால், இந்திய அளவில் அது ட்ரெண்ட் ஆகும்னு கனிமொழி மேடமோ, நாங்களோ எதிர்பார்க்கலை.” இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, `மெட்ரோ’ பட நடிகர் சிரிஷ் இருவரும் `I am a தமிழ் பேசும் Indian’, `ஹிந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட்களை அணிந்திருந்த புகைப்படங்களை அண்மையில் அவர்களின் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். அந்தப் படங்கள் அடுத்த சில நிமிடங்களில் செம வைரல் ஆகவும், `ஹிந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆகத் தொடங்கியது. பலரும் தொடர்ந்து பதிவுகளை இந்த ஹேஷ்டேக்கில் பதிவிடவே, அந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது அடுத்தடுத்து பிரபலங்கள் பலரும், `ஹிந்தி தெரியாது போடா’ டி ஷர்ட்

அணிந்த படங்களைப் பகிர ஆரம்பித்தனர். நடிகர் சாந்தனு – கீர்த்தி தம்பதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் பலரும் தங்களின் டி ஷர்ட் புகைப்படங்களைப் பகிர்ந்துவந்தனர்.

இந்நிலையில், தி.மு.க எம்.பி கனிமொழி தன் ட்விட்டர் பக்கத்தில், “ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல.” என்று ஞாயிறு இரவு குறிப்பிட்டிருந்தார்.

p>இந்நிலையில், கனிமொழி டிசைன் செய்த டி ஷர்ட்களை ப்ரின்ட் செய்துகொடுத்த திருப்பூரைச் சேர்ந்த சேகரிடம் பேசினோம்.

“நான் 10 வருஷமா இந்தத் தொழில்ல இருக்கேன். இந்த டி ஷர்ட் வாசகம் முதல் டிசைன், இ-ப்ரின்ட் வரை எல்லாத்தையும் கனிமொழி மேடம்தான் முடிவு செய்தாங்க. அந்த மாடலை எங்களிடம் கொடுத்து, 600 டி ஷர்ட்கள் ப்ரின்ட் செய்து தரச்சொல்லிக் கேட்டாங்க. நாங்களும் கொடுத்தோம். அதை அவங்க தரப்பிலிருந்து யுவன் சார், சிரிஷ் சார்னு செலிப்ரிட்டிகள் உட்பட பலருக்கும் கொடுத்தாங்க. யுவன் சார் போட்ட போட்டோ முதலில் வைரல் ஆனது. ஆனால், இந்திய அளவில் அது ட்ரெண்ட் ஆகும்னு கனிமொழி மேடமோ, நாங்களோ எதிர்பார்க்கலை.

ட்விட்டர் ட்ரெண்ட்டைத் தொடர்ந்து, இன்னும் அதிக எண்ணிக்கையில் அந்த டி-ஷர்ட்களை ப்ரின்ட் பண்ண ஆரம்பிச்சோம். நிறைய ஆர்டர்கள் வந்துட்டே இருக்கு. ஒரு மணி நேரத்துக்கு 40,000, 50,000-னு ஆர்டர்கள் வந்து குவியுது. திருப்பூரில் இப்போ பல கார்மென்ட் கம்பெனிகள் இந்த டி-ஷர்ட்களை ப்ரின்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. தவிர, தமிழகத்தின் பல பகுதிகளிலும், பலரும் இப்போ இந்த டி ஷர்ட் வாக்கியங்களை, இதே கலர், டிசைனில் ப்ரின்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. கொரோனால முடங்கிப் போயிருந்த கார்மென்ட்ஸ் தொழிலுக்கு, இந்த டி-ஷர்ட் ட்ரெண்டால இப்போ உயிர் கிடைச்சிருக்கு. பல தொழில்முனைவோர்களுக்கு இது ஊக்கமா அமைஞ்சிருக்கு” என்றார்,

கீர்த்தி - சாந்தனு
கீர்த்தி – சாந்தனு
Photo: Twitter / KikiVijay

“இந்த வாசகங்கள் மட்டுமல்ல… இன்னும் சில வாசகங்களையும் கனிமொழி மேடம் டிசைன் பண்ணிக் கொடுத்திருக்காங்க. அதேபோல, பொதுமக்களும் பல தமிழ் உணர்வு, இந்தி எதிர்ப்பு வாசகங்களுடன் டி-ஷர்ட் போட்டோஸ் போட்டுட்டு இருக்காங்க. பொதுவாக, மக்கள் மனதில் என்ன இருக்கோ அதுதான் வைரல் ஆகும். அதுக்கு ஒரு தூண்டுகோல் தேவைப்படும். தமிழ் மக்களின் இந்தி எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்த இந்த டி-ஷர்ட் ஒரு காரணமா அமைஞ்சதும், அதில் எங்க பங்களிப்பும் இருப்பது குறித்தும் ரொம்பவே பெருமையா இருக்கு” என்றார் சேகர்.

கருத்துகள் இல்லை: