வெள்ளி, 11 செப்டம்பர், 2020

China -India எல்லைப் பிரச்சினை தீர்வுக்கு 5 அம்ச திட்டம்: இந்தியா- சீனா ஒப்புதல்

dailythanthi.co இந்தியா- சீனா இடையே எல்லையில் உச்சகட்ட பதற்றம் நிலவும் நிலையில் இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

மாஸ்கோ,இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை, நீடித்து வருகிறது. சமீப காலமாக லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன துருப்புகளின் அத்துமீறலால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன.      கடந்த ஜூன் 15-ந் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை ஆக்கிரமிக்க சீன துருப்புகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லை நிலைமை மேலும் மோசமானது.         கடந்த 4-ந் தேதி மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்றபோது, 

சீன ராணுவ மந்திரி வெய் பெங்கியை இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். அப்போது அவர், சீன துருப்புகள் ஒரு தலைபட்சமாக அசல் கட்டுப்பாட்டு கோட்டுடனான நிலைமையை மாற்ற முயற்சிக்கும் செயல், இரு தரப்பு ஒப்பந்தங்களை மீறும் செயல் என்று கண்டித்ததுடன், மோதல் பகுதிகளில் இருந்து படைகளை முழுமையாக விலக்கிக்கொள்ள இந்தியாவுடன் சீனா இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்

ஆனால் அதன்பின்னரும் கடந்த 7-ந் தேதி இரவு சீன துருப்புகள் பயங்கரமான ஆயுதங்களுடன் லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய நிலைகளில் ஒன்றை நோக்கி அத்துமீறி முன்னேறி துப்பாக்கி சூடு நடத்தி விட்டு, இந்திய தரப்பினர் மீது அபாண்டமாக பழி போட்டது. இதனால் லடாக்கில் இரு தரப்புகளும் படைகளை குவித்து, தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்தநிலையில் மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றார். இந்த கூட்டத்தின் நடுவே அவர் தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளை அடுத்தடுத்து சந்தித்து, இரு தரப்பு உறவுகள், பிராந்திய விவகாரங்கள் குறித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து, ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ரிக்’ அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தை ரஷிய வெளியுறவு மந்திரி லாவ்ரோவ் நடத்தினார். இதில், இந்திய வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கர், லடாக் மோதல் வலுத்து வருகிற நிலையில் சீன வெளியுறவு மந்திரி வாங் யியை சந்தித்து பேசினார். 

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், எல்லையில் நிலவும்  பிரச்சினையை தீர்க்க 5 அம்ச திட்டத்திற்கு இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள், மரபுகளை பின்பற்றி எல்லைப் பிரச்சினையை தீர்க்க 5 அம்ச திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், எல்லையில் தற்போது நிலவும் சூழல், இருநாடுகளின் நலனுக்கும் உகந்தது அல்ல என்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாகவும்  தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு எல்லையில் பதற்றத்தை தணிக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: