வெள்ளி, 24 மார்ச், 2017

அசோகமித்திரன் ...



 minnambalam : அசோகமித்திரன் இறந்துவிட்டார் என்ற செய்தி ‘புதிய தலைமுறை’யில் பார்த்தபோது என்னால் நம்ப முடியவில்லை. போன வாரம்தான் அவருடைய பேத்தியின் திருமண வைபவத்தின்போது அவரைச் சந்தித்தேன். நான் எப்போதும் வாரம் ஒருமுறையாவது அவரைச் சந்திப்பது வழக்கம். அவருக்குத் தேவையான உதவிகளை செய்துகொண்டிருப்பேன். எங்காவது அவரை அழைத்துக்கொண்டு போவதற்கு நானும் கூட நின்று ஒத்தாசை செய்வேன். சமீபத்தில் நற்றிணை அலுவலகத்துக்கு அவரை அழைத்துக்கொண்டு போனேன். குறுகலான அந்த இடத்துக்கு அவரை அழைத்துக்கொண்டு போனபோது அவர் வாசல்படியில் தடுமாறி விழத் தெரிந்தார். உடனே அவர் கீழே விழாமல் பிடித்துக்கொண்டேன். ஒவ்வொரு முறையும் அவர் ஏதாவது கூட்டத்துக்கோ அல்லது ஏதாவது திருமணத்துக்கோ செல்லும்போது நான்தான் துணையாகச் செல்வேன்.

அவர் போன் செய்து அழைக்கும்போது, உடனே வெங்கடேஷ்வரா போளி ஸ்டாலில் ஒரு மிளகாய் பஜ்ஜி வாங்கிக்கொண்டு வருவேன். சமீபத்தில் அவருக்கு போன் செய்ய வேண்டும் என்று நினைத்து நினைத்து போன் செய்யாமல் இருந்து விட்டேன். அவர் மரணம் எதிர்பாராத வருத்தத்தை எனக்குக் கொடுத்துள்ளது. அவரைப் பற்றிய கட்டுரை ஒன்றை இங்கே அளிக்கிறேன்.
நானும் அசோகமித்திரனும்
அசோகமித்திரனை நான் எப்போது சந்தித்தேன். அவரை முதலில் சந்தித்தேனா அல்லது அவரைப் பற்றி எப்போது எந்த சந்தர்ப்பத்தில் அறிந்துகொண்டேன். இந்தக் கேள்விகளுக்குமுன்னால், நான் நூல் நிலையத்தில் அதிகமாகப் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவன். ஒவ்வொரு முறையும் நூல் நிலையம் போகும்போதும் எனக்குப் பிடித்த புத்தகங்களை எடுத்துப் படித்துக்கொண்டிருப்பேன். ஒருமுறை என்ன சிறுகதைத் தொகுப்பு என்பது ஞாபகம் இல்லை. அசோகமித்திரன் என்ற பெயரில் ஒரு சிறுகதைத் தொகுதியைப் பார்த்தேன். மிகத் தயக்கத்துடன் எடுத்து வைத்துக்கொண்டேன். அத்தொகுப்பில் கதைகள் எல்லாம் சின்னச் சின்ன கதைகளாக இருக்கும்போல் தோன்றியது. அப்போது எனக்கு அறிமுகமான எழுத்தாளர்கள் சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, கல்கி, நா.பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், ஜெயகாந்தன், அகிலன் போன்ற எழுத்தாளர்கள்தான். முதன்முதலாக அசோகமித்திரனை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் வித்தியாசமாக இருப்பது போல் தோன்றியது. ஒவ்வொரு சிறுகதையிலும் ஆரம்பமும் முடிவும் இல்லாததுபோல் தோன்றியது. ஆனால், படிக்கத் தூண்டியது. என் முதல் வாசிப்பிலேயே அகிலன், ந.பா எழுத்துகளைப் படிக்க முடியவில்லை.
அடுத்த வாசிப்பில் இன்னும் சில பேர் விலகிவிட்டார்கள். ஆனால், இன்னும் சில பேர் சேர்ந்தார்கள். அசோகமித்திரன் தொடர்ந்து இருந்து கொண்டு வந்தார். அவர் பெயரைக் கண்டால் அப்புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்து விடுவேன். அசோகமித்திரன் எதை எழுதினாலும் அவர் ரசித்து எழுதுவதாக தோன்றும். வாசகர்களும் அந்த ரசிப்புத் தன்மையை நிச்சயமாக உணர்வார்கள்.
அசோகமித்திரன் கணையாழியில் எழுதிக்கொண்டிருந்தார். அதனால் அவர் என்ன எழுதுகிறார் என்பதைப் படிக்க கணையாழியை வாங்குவேன். இந்த கணையாழி மூலமாக அவர் சொல்கிற பலவற்றை நான் புரிந்துகொண்டேன். எத்தனையோ நல்ல சினிமாக்களை அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார். எத்தனையோ நல்ல புத்தகங்களை, பத்திரிகைகளை அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர் சொல்கிற உத்தியும் ஒரு சிறுகதையை எழுதுவதுபோல் இருக்கும். அவர் மூலம்தான் ஐ.பி.ஸிங்கரை நான் தெரிந்துகொண்டேன். அவருடைய புத்தகங்களை அமெரிக்கன் லைப்ரரியில் தேடிக் கண்டுபிடித்து படிக்க ஆரம்பித்தேன். நான் அழகியசிங்கராக புனைப்பெயர் வைத்துக் கொள்வதற்கு இந்த ஐ.பி.ஸிங்கர் ஒரு காரணம்.
நானும் அந்தச்சமயத்தில் கொஞ்சம் கொஞ்சம் எழுத முயற்சி செய்துகொண்டிருந்தேன். நான் எழுதி அனுப்பிய சிறுகதைகளை பிரபல பத்திரிகைகள் பிரசுரம் செய்யவில்லை. எல்லாம் திரும்பி திரும்பி வந்துவிடும். ஒருமுறை ஆனந்த விகடனுக்கு எழுதிய கதை ஒரு வருடம் கழித்து திரும்பி வந்துவிட்டது. வெறுத்துவிட்டேன்.
இன்னும் பல எழுத்தாளர்களை நான் கணையாழி மூலமாகவும், அசோகமித்திரன் மூலமாகவும் தெரிந்துகொண்டேன். ஒருமுறை ‘கவனம்’ என்ற பத்திரிகையைப் பற்றி ஒரு குறிப்பு கணையாழில் வந்தது. அந்தப் பத்திரிகையை வாங்குவதற்காக மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணிக்கு பஸ்ஸில் வந்து ‘கவனம்’ பத்திரிகை நடத்தும் இடத்துக்கு வந்தேன். அது ராஜகோபாலன் என்பவரின் வீடு என்பதைத் தெரிந்துகொண்டேன். ஒரு பத்திரிகை நடத்த தனி அலுவலகம் என்பது தேவையில்லை என்பதையும் தெரிந்துகொண்டேன்.
‘கவனம்’ பத்திரிகை மூலம், ஞானக்கூத்தன், ராஜகோபாலன், ஆனந்த், ரா.ஸ்ரீனிவாஸன், காளிதாஸ், வைத்தியநாதன் முதலிய நண்பர்களைச் சந்தித்தேன். ஒரு சந்தர்ப்பத்தில் ஆத்மாநாமும் என் கண்ணில்பட்டார். சம்பத்தையும் அறிவேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பீச்சில் ஏதோ ஒரு சிலைக்குப் பக்கத்தில் நாங்கள் சந்தித்துக்கொள்வோம். ஏதோ ஒரு சிலை என்று ஏன் சொல்கிறேன் என்றால் பாரதியார் சிலைக்குப் பக்கத்தில் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.
அடுத்தமுறை அசோகமித்திரனை நேரிடையாக சந்திக்கும் சந்தர்ப்பம் என்னுடைய குறுநாவல் மூலம் ஏற்பட்டது. அந்த குறுநாவலில் வங்கியில் பணிபுரிபவர் ஒருவர் கதாபாத்திரமாக வந்திருப்பார். நானும் வங்கியில் பணிபுரிவதால் யாராவது படித்து பிரச்னை ஆகிவிடுமோ என்று நினைத்துப் பயந்து அசோகமித்திரன் வசிக்கும் தி நகர் வீட்டுக்குச் சென்றேன். நான் அவரைப் பார்த்த சமயம் அவருக்கு உடம்பு சரியில்லை. படுத்துக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் நான் அவரிடம், வங்கியில் பணிபுரிபவர் என்பதை நீக்கி விடலாமா என்று கேட்டேன். அவர் அதெல்லாம் மாற்ற வேண்டாம். ஒரு பிரச்சனையும் வராது என்று கூறிவிட்டார்.
மேலும் அவர் என் குடும்பத்தைப் பற்றியும், என்னைப் பற்றியும் விசாரித்தார். அசோகமித்திரன் அவரைப் பார்த்துப் பேச வருபவர்களிடம் அக்கறை உள்ளவர். கல்லூரிப் படிக்கும் மாணவர்கள் யாராவது கதை எழுதுபவர்களாக இருந்தால் படிப்பை முடித்துவிட்டு எழுதுங்கள் என்று கூறக்கூடியவர். அதேபோல் வேலை தேடிக்கொண்டிருப்பவர் கதை எழுதினால் முதலில் வேலையைத் தேடுங்கள், எழுதுவதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லக்கூடியவர். அதே சமயத்தில் போரடிக்கும்படி அவரிடம் பேசிக்கொண்டிருந்தால், பேச வந்தவரின் மனம் கோணாதபடி அனுப்பி விடுவார்.
அசோகமித்திரன் ஓர் எளிமையான மனிதர். அவர் எழுத்தில் காணப்படும் எளிமை அவர் பேச்சிலும் காணப்படும். நகுலன் எழுத்தில் தூக்குதலாக தெரியும் தன்னுணர்வுத் தன்மை அசோகமித்திரனிடம் இருக்காது. அதேபோல் மிகை உணர்ச்சித் தன்மையும் அவர் எழுத்தில் காணப்படாது. ஒரு தினசரி பத்திரிகையை எடுத்துப் படிப்பதுபோல அவர் எழுத்து சரளமாகப் போய்க் கொண்டிருக்கும். ஆனால், அந்த எழுத்தில் ஓர் ஆழம் இருக்கும்.
முதலில் என் பத்திரிகையான நவீன விருட்சத்துக்கு ஏதாவது எழுதித் தருவாரா என்ற சந்தேகம் இருந்தது. அவரிடம் தயங்கித் தயங்கிக் கேட்டுக்கொண்டபோது அவர் தொடர்ந்து எழுதிக் கொடுக்க ஆரம்பித்தார். கேட்ட ஒரு வாரத்தில் எழுதி அனுப்பி விடுவார். ஆனால், என் பத்திரிகையைக் கொண்டுவர நான் இன்னும் பல நாள்கள் எடுத்துக்கொள்வேன். இரண்டு பக்கங்களுக்கு மேல் அவர் எழுதித் தர மாட்டார். சரியாக அளவு எடுத்து அனுப்புவதுபோல் அவர் கட்டுரை அமைந்திருக்கும்.
(நவீன விருட்சம் சார்பாக 22.09.2012 அன்று நடந்த அசோகமித்திரன் 82 என்ற கூட்டத்தில் பேசிய கட்டுரை.)
கட்டுரையாளர் குறிப்பு:

அழகியசிங்கர் - சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று இயங்கிய படைப்பாளி. 'நவீன விருட்சம்' சிற்றிதழை 100 இதழ்களுக்கு மேல் கொண்டு வந்த சாதனையாளர். அசோகமித்திரனுடன் இறுதிக்காலம் வரைக்கும் நெருங்கிப் பழகிய நண்பர்.

கருத்துகள் இல்லை: