வெள்ளி, 24 மார்ச், 2017

தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு இல்லை!minn


minnambalam :தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு, மாணவர்கள் பிளஸ்-டூ பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு மத்திய அரசு நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று கூறியது. இதனால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் விலக்களிக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து, நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. அந்த அவசரச் சட்டம் ஓராண்டில் முடிவடைந்ததையடுத்து, தமிழக மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதவேண்டிய சூழல் ஏற்பட்டது. நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் அமைந்தவை. அந்தப் பாடத் திட்டமும் தமிழக அரசின் பாடத் திட்டமும் வேறுவேறானவை. அதனால், தமிழக மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுவார்கள் என்பதால், தமிழக சட்டசபையில் நீட் தேர்வு விலக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்களிப்பது குறித்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை சபாநாயகர் தம்பிதுரை இருவரும் இன்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்துப் பேசினார்கள்.

இந்த சந்திப்புக்குப் பின்னர், மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, “தமிழகத்துக்கு இந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க முடியாது. மேலும் இதுதொடர்பாக சட்ட அமைச்சகத்திடம் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: