சனி, 12 அக்டோபர், 2013

முக்கிய சாட்சியான ராசாவை கண்டு கூட்டு குழு ஏன் பயப்படுகிறது ?

ஆ.ராசா விவகாரத்தில் தி.மு.க. டயலாக்: “இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை”
2ஜி – ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தில் முக்கிய சாட்சியான ஆ.ராசாவை, நாடாளுமன்ற கூட்டுக் குழு அழைக்காமல் விட்டதற்கு, அரசியல் உள்நோக்கமே காரணம்” என வெளிப்படையாக மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ள தி.மு.க., அதன்பின் அது பற்றி விளக்கமாக கூற முடியாது எனவும் கூறியிருக்கிறது : “இதற்கு மேல், இப்போதைக்கு எதையும் கூற விரும்பவில்லை.”

சாக்கோ தலைமையிலான, நாடாளுமன்ற கூட்டுக்குழு, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணையை நடத்தி, இறுதி அறிக்கையை தயாரித்து முடித்துள்ளது. கூட்டுக் குழுவின் கடைசி கூட்டத்தில் இந்த அறிக்கை வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டும் உள்ளது.
இந்த அறிக்கைக்கு பலத்த எதிர்ப்பு உள்ளது. எதிர்ப்பு தெரிவித்துள்ள பார்ட்டிகளில் தி.மு.க.வும் ஒன்று.
தி.மு.க. சார்பில், நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் எதிர்ப்பு அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “கூட்டுக்குழு அமைக்கப்பட்டதில் இருந்தே, முக்கிய சாட்சியான ராசாவை, அழைத்து விசாரிக்க வேண்டுமென்று பல கட்சிகளும் கேட்டன. ஆனால், இந்த கோரிக்கை கடைசிவரை ஏற்கபடவில்லை.
ராசாவை அழைத்து வாக்குமூலம் பதிவு செய்ய கால அவகாசம் இல்லை என்று காரணம் கூறப்பட்டது.
இது முற்றிலும் ஏற்க முடியாத வாதம். கூட்டுக்குழுவின் காலக் கெடுவை நீட்டித்துக் கொடுக்கும்படி கேட்டபோதெல்லாம், பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கி, காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டே வந்தது. எனவே, காலஅவகாசம் இல்லை என்பது ஏற்கப்பட முடியாத காரணம்.
இந்த விவகாரத்தில், முக்கியமான பிரதான சாட்சியே, ராசாதான். முக்கிய சாட்சியான அவரை விசாரிக்காமல் விட்டது தவறு. இதற்கு அரசியல் உள்நோக்கமே, காரணம். இதனால், மத்திய அரசுக்குத்தான் பாதிப்பு உண்டாகியுள்ளது. எனவே இப்போதைக்கு இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
ஆமா.. மத்திய அரசில் கூட்டாளியாக இருந்த காலத்திலும், தி.மு.க.வால் கூட்டுக்குழு முன் ராசாவை கொண்டுவர முடியவில்லை என்று சொல்வது… வேறு எங்கோ இடிக்கிறதே! அதுதான், “இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை” டயலாக்கோ! viruvirupu.com

கருத்துகள் இல்லை: