வெள்ளி, 2 டிசம்பர், 2022

3200 கி.மீ நடுக்கடலில் 11 நாட்கள் கப்பலின் சுக்கான் பகுதியில் அமர்ந்து உயிர் பிழைத்த 3 அகதிகள்!

 கலைஞர் செய்திகள்  - lenin  :  வறுமை, போர் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தங்கள் சொந்த மன்னை விட்டு மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இப்படி வரும்போது ஆபத்தான வழிகளில் பயணம் மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக படகுகளை எடுத்துக் கொண்டு கடல் கடந்து செல்லும் போது படகுகள் கவிழ்ந்து பலர் உயிரிழந்து விடுகின்றனர். உயிர் பிழைப்பவர்களே அகதிகளாக ஏதாவது ஒரு நாட்டில் தஞ்சம் அடைகின்றனர். இது ஆபத்தான பயணம் என்று தெரிந்தும் பலர் கடல் வழியாகவே தங்கள் நாட்டைவிட்டு செய்கின்றனர்.
இந்நிலையில் 3 அகதிகள் 11 நாட்கள் கப்பலின் சுக்கான் பகுதியில் அமர்ந்து சோறு, தண்ணீர் இல்லாமல் உயிருடன் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று சேர்ந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியிலிருந்து வறுமை காரணமாக ஸ்பெயின் நாட்டிற்குப் பலர் அகதிகளாகத் தினந்தோறும் இடம் பெயர்ந்து செல்கின்றனர். இப்படிச் செல்பவர்கள் கடல்களில் ஆபத்தான வழிகளில் பயணம் செய்கின்றனர்.


அந்த வகையில், நைஜீரியாவில் உள்ள கேனரி தீவிலிருந்து 3 அகதிகள் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்ற அலிதின் 2 என்ற எண்ணெய் கப்பலின் அடிப்பகுதியில் உள்ள சுக்கான் பகுதியில் யாருக்கும் தெரியாமல் ஏறி அமர்ந்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து அந்த கப்பல் கேனரி தீவிலிருந்து ஸ்பெயின் நாட்டை நோக்கி சென்றது.. பிறகு ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றபோதுதான் இந்த மூன்று பேர் பற்றி கப்பலில் இருந்தவர்களுக்கு தெரியவந்துள்ளது. மேலும் இந்த 11 நாட்களில் 3200 கி.மீட்டர் பயணம் செய்து ஸ்பெயின் நாட்டிற்கு வந்துள்ளனர்.

இப்படியான பயணத்தில் எப்படி இவர்கள் சுக்கான் பகுதியில் அமர்ந்து கொண்டு சோறு, தண்ணீர் கூட இல்லாமல் உயிருடன் இருந்தனர் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் 3 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இப்படி நடப்பது முதல் முறையில்லை. 2020ம் ஆண்டு 14 வயது நைஜீரியா சிறுவன் ஒருவன் 15 நாள் கப்பலின் சுக்கான் பகுதியில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். அதேபோல் அதே ஆண்டு 4 பேர் 10 நாள் பயணம் செய்து ஸ்பெயின் நாட்டிற்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை: