திங்கள், 28 நவம்பர், 2022

சீனாவில் கரோனா ஊரடங்கிற்கு எதிராக மக்கள் போராட்டம்; சிக்கலில் சீனா 

நக்கீரன் : சீனாவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருக்கும் நிலையில் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கட்டுப்பாடுகளை எதிர்த்து எதிர்ப்புக் குரல்கள் நாடு முழுவதும் எழுந்துள்ளது.
கரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாகவே உலக அளவில் பெரும் பொருளாதார பின்னடைவுகள் ஏற்பட்டு தற்போது சீராகி வரும் நிலையில் கரோனா வைரஸ் முதன் முதலில் பரவிய நாடான சீனாவில் அண்மையில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.
30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனா தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் நாடு முழுவதும் பல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.

சீனாவின் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சீனாவின் மேற்கு மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தார்கள். இதற்கு காரணம் கடுமையான கரோனா கட்டுப்பாடுதான் என்று அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க துவங்கினர். இப்படி நாட்டின் பல இடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: