வியாழன், 21 ஏப்ரல், 2022

திருப்பத்தூர் ஆசிரியரை கடுமையாக தாக்க முயற்சித்த மாணவர் இடை நிறுத்தம்

 மாலைமலர் : அரசு பள்ளிகளில் மாணவர்கள் தகாத முறையில் நடந்து கொள்வதும் ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒரு காலத்தில் அரசு பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க வரும் பெற்றோர்கள் எனது பிள்ளையை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால் அவன் நன்றாக படிக்க வேண்டும் என கூறி விட்டுச் செல்வார்கள்.
அப்போது பள்ளிகளில் ஆசிரியர்களின் முழுக் கட்டுப்பாட்டில் மாணவர்கள் இருப்பார்கள். கல்வி, ஒழுக்கம் என மாணவர்களிடமும் நல்ல பழக்கங்கள் வளர்ந்து வந்தன.


காலப்போக்கில் பள்ளிகளில் மாணவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் அடிக்கக்கூடாது. கடுமையாக கண்டிக்க கூடாது என்ற கட்டுப்பாடுகள் வந்தது.
இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் அத்துமீற தொடங்கினர். ஆரம்ப கட்டத்தில் ஆசிரியர்களை எதிர்த்து பேசியவர்கள் தற்போது ஆபாசமாக பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பதும், வகுப்பறைக்கு போதையில் வருவதும் என பல்வேறு ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் வகுப்பறையில் ரெக்கார்டு நோட்டு கேட்ட ஆசிரியரை ஆபாச வார்த்தையால் திட்டி தாக்க முயன்ற சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகப் சஞ்சய் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வகுப்பறையில் இருந்த மாணவர்களிடம் ரெக்கார்டு நோட்டு சமர்ப்பிக்கும் படி கேட்டுள்ளார்.

இதனை சில மாணவர்கள் பொருட்படுத்தாமல் நோட்டு சமர்ப்பிக்காமல் இருந்தனர். இந்நிலையில் நேற்று வகுப்பறைக்கு சென்ற ஆசிரியர் சஞ்சய் ரெக்கார்டு நோட்டு சமர்ப்பிக்காத மாணவர்களை தட்டிக் கேட்டார்.

அப்போது சில மாணவர்கள் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றனர். மேலும் 2 மாணவர்கள் அவரது அருகே சென்று அவரை அடிப்பது போல் பாய்ந்து அருகில் சென்று ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தனர்.

மாணவர்களின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறினார். இந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அரசு பள்ளிகளில் ஆசிரியரை மாணவர்கள் தாக்க முயற்சிப்பதும், ஆபாச வார்த்தைகளால் பேசுவதும் இதில் தத்ரூபமாக உள்ளன. இது மற்ற பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வேலன் விசாரணை நடத்தினார். சமீபகாலமாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் தகாத முறையில் நடந்து கொள்வதும் ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில்,  வகுப்பறையில் ஆசிரியரை மிரட்டிய அரசு பள்ளி மாணவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மதனூர் அரசு பள்ளியில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் விசாரணை நடத்திய நிலையில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தாவரவியல் ரெக்கார்ட் நோட் சமர்ப்பிக்காமல் பாய் போட்டு வகுப்பறையிலேயே மாணவர் தூங்கியதாகவும், தட்டிக்கேட்ட தாவரவியல் ஆசிரியர் சஞ்சயை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்த வீடியோ வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: