திங்கள், 18 பிப்ரவரி, 2013

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி: தூக்கு தண்டனை கைதிகளை காப்பாற்ற போராட்டத்தில் குதிக்க வேண்டும்


தூக்கு தண்டனை கைதிகளை காப்பாற்ற தமிழர்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டும்: வீரப்பன் மனைவி முத்துலட்சுமி சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாலாறு குண்டு வெடிப்பு சம்பவத்தில் நானும் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் கர்நாடக சிறையில் வாடினேன். பின்னர் நான் உள்பட பலர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மீசை மாதையன், ஞானபிரகாசம், சைமன், பிலவேந்திரன் ஆகிய 4 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்து விட்டது. பாலாறு சம்பவத்தில் உயிர் தப்பிய அதிகாரி கோபாலகிருஷ்ணன் என்ற ஒருவர் கொடுத்த சாட்சியத்தின் அடிப்படையில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் நானும் சில ஆண்டுகள் வீரப்பனுடன் இருந்தேன். ஆனால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கும், என் கணவருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர்கள் வீரப்பனை பார்த்ததே இல்லை. அவர்கள் அப்பாவி மக்கள். எனவே அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.
இந்த பிரச்சினையில் கர்நாடகாவின் பெரும் பான்மையான மக்கள் போலீஸ் அதிகாரிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை சரிதான் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் அப்பாவிகள் என்று சொன்னாலும் புரிந்து கொள்ளவில்லை. எனவே தமிழர்களின் உயிர்களை காப்பாற்ற தமிழர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும். இவர்களை காப்பாற்ற தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நாங்களும் மறியல் போன்ற போராட்டங்களை நடத்த உள்ளோம். எங்களுடன் தமிழ் அமைப்புகள், தமிழ் உணர்வாளர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்பட அனைவரும் போராட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தலித் விடுதலை கட்சியின் மாநில துணை செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர் கோபி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சகுந்தலா ஆகியோர் உடனிருந்தனர்  maalaimalar.com

கருத்துகள் இல்லை: