வியாழன், 12 ஜனவரி, 2012

கலைஞர்: தேவிகுளம், பீர்மேட்டை மீட்கும் கட்டாயத்தை ஏற்படுத்தி விட்டது கேரளா


Karunanidhi
சென்னை: வரலாற்று ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் சொந்தமான தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் வலியுறுத்திக் கூறவேண்டிய கட்டாயத்திற்கு கேரள அரசு நம்மை இட்டுச் சென்றிருக்கின்றது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள தேவிகுளம் மற்றும் பீர்மேடு உள்ளிட்ட பகுதிகள் தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதை வரலாற்று சான்றுகளுடன் விவரித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு அடிப்படையாக இருந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பீர்மேடு வட்டத்தில் கட்டப்பட்டிருக்கிறது. தேவிகுளம் வட்டத்தில் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதி அமைந்திருக்கிறது.
மொழிவழி மாநிலப் பிரிவினை நடைமுறைக்கு வந்தபோது தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரள மாநிலத்தோடு அதன் இடுக்கி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. அப்போதிருந்தே தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை கேரள மாநிலத்தோடு சேர்த்தது தவறு என்றும், அவை தமிழ்நாட்டோடு இருந்திட வேண்டுமென்றும் தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்துள்ள தேவிகுளம், பீர்மேடு பகுதிகளாவது தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டுமென்றும், தவறினால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் விவசாயத்திற்கு போதிய பாசன வசதியின்றி சங்கடப்பட நேரிடுமென்றும் டாக்டர் பா. நடராஜன் உள்ளிட்ட பல பொருளாதார நிபுணர்கள் ஆரம்பத்திலேயே எச்சரிக்கை செய்தார்கள்.

பொருளாதார நிபுணர்களின் கருத்தும், எச்சரிக்கையும், பொதுமக்களின் உணர்வும், தேவையும் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கோரிக்கையும், வலியுறுத்தலும், அன்றைக்கு பொருட்படுத்தப்படாமல், புறந்தள்ளப்பட்டதுதான், இன்றைக்கு பல பிரச்சினைகளுக்கு வழிவகுத்து விட்டது.

முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் மற்றும் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் அடங்கிய பீர்மேடு-தேவிகுளம், கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை பாண்டிய நாட்டு ஆட்சியின் கீழ் இருந்து, பின்னர் சேரநாட்டில் கொடி கட்டிப்பறந்த பூர்சார் என்னும் பூனையாறு தமிழ் சமஸ்தானமாக இருந்து வந்தது என்ற வகையில், தமிழர்களுக்குச் சொந்தமானது எனினும், அப்போது திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உரியதென தவறுதலாக கருதப்பட்டு, 1886 ஆம் ஆண்டில் ஒப்பந்தமும் நிறைவேற்றப்பட்டது.

பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும், திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் இடையே இந்த ஒப்பந்தம் எல்லை சரிவரத் தெரியாமல், போடப்பட்டதென்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

திருவாங்கூரின் எல்லை அரூர், கொட்டாரக்கரை வரைதான். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளையும் திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இணைத்து ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. அணை இருக்குமிடம் முழுவதும் சென்னை ராஜதானிக்கு சொந்தமானது என்பதால், பின் நாளில் ஏதேனும் தகராறுகள் ஏற்படலாம் எனக்கருதி பிரிட்டிஷ் அரசாங்கம் தமக்கு ஆறு லட்சம் ரூபாய் கொடுத்து விட்டு, அணைக்கட்டுப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் சென்னை ராஜதானியே எடுத்துக் கொள்ளட்டும் என்று திருவாங்கூர் மகாராஜா சென்னையிலுள்ள பிரிட்டிஷ் கவர்னருக்கு இரண்டு முறை கடிதம் அனுப்பினார்.

அந்தக் கடிதங்களுக்கு உரிய நேரத்தில் பதில் அனுப்பி, தமிழகத்தின் உரிமையையும், வரலாற்று ரீதியான உண்மையையும், பிரிட்டிஷ் கவர்னர் நிலை நிறுத்தியிருந்தால், அன்றைக்கே பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும். பிரிட்டிஷ் கவர்னர் செய்த பிழையின் காரணமாகவும், மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது கடைப்பிடிக்கப்பட்ட தவறான அணுகுமுறையின் காரணமாகவும், முல்லைப் பெரியாறு பிரச்சினை இன்றளவும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது.

1956-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி பேரறிஞர் அண்ணா 14-1-1956 அன்று தம்பிக்கு எழுதிய கடிதத்தில், தேவிகுளம், பீர்மேடு பகுதி தமிழகத்திற்கு உரியவை என்பதை ஆணித்தரமாக விளக்கியிருக்கிறார்.

தமிழரசு கழகம், கம்யூனிஸ்ட்டு கட்சி, பிரஜா சோஷலிஸ்ட் கட்சி போன்ற பிற கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்து பேரறிஞர் அண்ணா தேவிகுளம்-பீர்மேடு பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காக 20-2-1956 அன்று நாடெங்கும் பொது வேலை நிறுத்தமும் சென்னையில் பேரணி ஒன்றையும் நடத்துவது என முடிவு செய்தார்.

சென்னை மாநகரில் லட்சோபலட்சம் மக்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி, பி.டி.ராஜன் தலைமை தாங்கிட தீவுத் திடலில் இருந்து புறப்பட்டது. அண்ணா, பொதுவுடமை வீரர் ஜீவானந்தம், ம.பொ.சி. ஆகியோர் அந்தப் பேரணியில் நடந்தே சென்றனர்.

அந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முன்பு, சென்னை மண்ணடியில் 5-2-1956 அன்று நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் அண்ணா பேசும் போது,

தேவிகுளம்-பீர்மேடு தமிழருக்கே உரிய பகுதிகள், தமிழருக்குத்தான் சொந்தம், என்று தி.மு.கழகம், கம்யூனிஸ்டு, தமிழரசு கழகம் ஆகிய 3 கட்சிகளும் கூறுகின்றன. இவற்றுக்குத் துணையாக சோஷலிஸ்ட் கட்சி கூறுகிறது. பி.சோ.கட்சி நியாயம் என்கிறது, திராவிடர் கழகம் சொல்லுகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், காங்கிரஸ் கட்சியும் சொல்லுகிறது- தேவிகுளம், பீர்மேடு தமிழருக்கே என்று. பின் யாருடன் நமக்குச் சண்டை? சில பேரின் செயலாற்றாத தன்மையுடனும், சிலரின் நயவஞ்சகத் தன்மையோடும், சிலரின் இரண்டுங்கெட்டான் நிலையோடும்தான் நமக்கு சண்டை.

மலையாளிகளிடத்திலே நமக்குச் சண்டையா என்றால், அல்ல, இங்குள்ள மலையாளிகள் எல்லாம் கூடிக் கொண்டு, “தேவி குளம்-பீர்மேடு வட்டங்களைத் தரமாட்டோம் தமிழருக்கு” என்று கூறினார்களா என்றால் இல்லை. பின் மறுப்பவர் யார்?

தேவிகுளம், பீர்மேடு தமிழகத்தோடு சேர வேண்டும் என்று சட்டசபையில் எல்லோரும் ஏகோபித்து தீர்மானம் நிறைவேற்றினார்கள். காங்கிரஸ் மந்திரி சபையினர் அந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். நாட்டில் உள்ள எல்லா கட்சியினரும் கோருகிறார்கள். தேவிகுளம், பீர்மேடு தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டும்”-என்று தேவிகுளம், பீர்மேடு தமிழர்களுக்குத் தரப்பட வேண்டுமென்று கோராதவர் தமிழர்களில் எவருமில்லை.

தேவிகுளம், பீர்மேடு தமிழர்களுடையதுதான், தமிழ்நாட்டுடன்தான் அந்தப் பகுதிகள் இணைய வேண்டும் என்பதை அந்த பகுதி மக்கள் உலகத்திற்கும், ஊராள்வோருக்கும் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்” என்று கருத்து மழை பொழிந்தார்கள்.

29-1-1956 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற தி.மு. கழகப் பொதுக்குழுவிலும், 17, 18, 19, 20-5-1956இல் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க.வின் 2-வது மாநில மாநாட்டிலும், 10-2-1957 அன்று சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் நடைபெற்ற தி.மு.க. தேர்தல் சிறப்பு மாநாட்டிலும், தொடர்ந்து கழக மாநாடுகளிலும் தேவிகுளம்-பீர்மேடு பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1956-ஆம் ஆண்டுக்குப் பிறகு முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தமிழக நலனைப் பாதித்திடும் எத்தனையோ பரிமாணங்கள் ஏற்பட்டு விட்டன. பலமுறை கேரள முதல்வருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. கேரள முதல்-அமைச்சரோடும், கேரள அரசு அலுவலர்களோடும் அரசியல் ரீதியாகவும், அலுவலர் நிலையிலும் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

நீதிமன்றங்களுக்கும் இந்தப் பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டு விட்டது. எனினும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட, பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை.

2006-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உறுதியான உத்தரவு ஒன்றை வழங்கியது. அந்த உத்தரவில், முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்றும், அணையின் நீரளவை 142 அடி வரை உயர்த்தலாம் என்றும் தெளிவுபடுத்தியது. எனினும் இந்திய உச்சநீதிமன்றத்தின் அந்த உத்தரவை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளைக் காப்பாற்றுவதற்கும்-கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை அம்சங்களைப் பேணுவதற்கும், கேரள அரசு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாறாகவும், அதனை நிறைவேற்றாமல் மறுதலிப்பதற்கேதுவாகவும் சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்து, அணையின் நீரளவை 136 அடி என்றே நிறுத்தியுள்ளது.

மீண்டும் இந்தப் பிரச்சினை இந்திய உச்சநீதிமன்றத்திற்கே எடுத்துச் செல்லப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி டாக்டர் ஏ.எஸ்.ஆனந்த் அவர்கள் தலைமையில் கேரள மாநில அரசும் உரிய இடம்பெறும் வகையில் ஐந்து உறுப்பினர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழுவும் அனைத்து அம்சங்களையும் குறித்த தீவிர பரிசீலனையில் ஆழ்ந்துள்ளது.

இந்த உச்சக்கட்ட நிலையில் கேரள அரசின் முதல்-அமைச்சர் உம்மன் சாண்டி, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணவேண்டும் என்று பிடிவாதமாக சொல்லி வருகிறார். மேலும் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கருத்திலிருந்து கேரள அரசு கொஞ்சமும் பின்வாங்காது என்றும், தமிழக விவசாயிகளின் உணர்வுகள் கொந்தளிக்கும் வகையில் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருக்கிறார்.

எனவே இந்த நெருக்கடியான நிலையில், வரலாற்று ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் சொந்தமான தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் வலியுறுத்திக் கூறவேண்டிய கட்டாயத்திற்கு கேரள அரசு நம்மை இட்டுச் சென்றிருக்கின்றது.

1956-ல் அறிஞர் அண்ணா, பொதுவுடமை வீரர் ஜீவா, சிலம்புச் செல்வர் ம.பொ.சி. ஆகியோரும், மற்றும் பல தலைவர்களும் ஒன்றிணைந்து உயர்த்திய குரலை, மீண்டும் ஓங்கி ஒலித்திட வேண்டிய அவசர அவசியம் இன்றைக்கு நமக்கு ஏற்பட்டிருக்கின்றது.

எனவே 1886ல் சென்னை ராஜதானியின் பிரிட்டிஷ் கவர்னர் செய்த பிழையினைச் சரிசெய்து, மொழிவழி மாநில ஏற்பாட்டின்போது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியினைத் துடைத்து, வரலாற்றினை முறைப்படுத்திட, மத்திய அரசு தற்போதாவது முன்வர வேண்டுமென்று தி.மு.க.வின் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மாநில அரசும் அதற்கான முயற்சிகளை முனைப்போடு மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை: