திங்கள், 19 ஏப்ரல், 2021

பெரியார் ஈ.வெ.ரா சாலை : 4 அடியில் எழுதப்பட்டிருப்பதை அழித்து 40 அடிக்கு!

பெரியார் ஈ.வெ.ரா சாலை : 4 அடியில் எழுதப்பட்டிருப்பதை அழித்து 40 அடிக்கு எழுத வைத்தமைக்கு நன்றி!
kalaignarseithiga -Prem Kumar : பெரியார் சாலையை, “கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு” என்று பெயர் மாற்றம் செய்ததற்கு கடும் கண்டங்கள் எழுந்த நிலையில், பூந்தமல்லி செல்லும் சாலையில் “பெரியார் ஈ.வெ.ரா சாலை” என சுவற்றில் எழுதப்பட்டுள்ளது. சென்னை- பூந்தமல்லியை இணைக்கும் ஈ.வெ.ரா பெரியார் சாலை கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என பெயர் மாற்றப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆனது. ஆங்கிலேயர்கள் காலத்தில் சென்னை ஜீரோ பாயிண்டிற்கும் பூந்தமல்லிக்கும் இடையே சாலை உருவாக்கப்பட்டு, அதற்கு கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என பெயரிடப்பட்டது.

இந்த நிலையில் 1979-ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடிய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அந்த சாலைக்கு ஈ.வெ.ரா பெரியார் சாலை என பெயர் மாற்றம் செய்தார். இந்த நிலையில் எம்.ஜி.ஆர் வைத்த பெயருக்கு பதிலாக மீண்டும் ஆங்கிலேயர்கள் வைத்த கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என்ற பெயர் வைக்கப்பட்டதற்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, வைகோ, உள்ளிட்ட தலைவர்கள் கண்டன அறிக்கையை விடுத்த நிலையில், திராவிடர் விடுதலை கழகத்தினர் நெடுஞ்சாலை துறையால் வைக்கப்பட்ட பெயர் பலகையில் கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோட் என்ற பெயரை மட்டும் கருப்பு மை பூசி அழித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

பெரியார் ஈ.வெ.ரா சாலை : 4 அடியில் எழுதப்பட்டிருப்பதை அழித்து 40 அடிக்கு எழுத வைத்தமைக்கு நன்றி!

பெயர் பலகை விவகாரத்தில் மௌனம் காத்துவந்த தமிழக அரசு இதுவரை இதுகுறித்து எவ்வித பதிலும் அளிக்காமல் பொறுமையாக இருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென கிராண்ட் டிரங்க் ரோடு என்ற பெயரை மறைத்து ஈ.வெ.ரா பெரியார் சாலை என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

இந்நிலையில் தற்போது கீழ்ப்பாக்கம் சந்திப்பில் பூந்தமல்லி சாலையில் பெரிய அளவில் ஈ.வெ.ரா பெரியார் சாலை என சுவற்றில் எழுதப்பட்டுள்ளது. அதில் கோயம்பேடு, பாரிமுனைக்கு செல்லும் வழி என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: