செவ்வாய், 10 மார்ச், 2020

பா ஜ க தயவால் எம்.பி. பதவி பெறவில்லை- ஜிகே வாசன் ,, (பணம் கொடுத்து வாங்கப்பட்டதாக சமுகவலையில் .)

பாரதிய ஜனதா தயவால் எம்.பி. பதவி பெறவில்லை- ஜிகே வாசன்மாலைமலர் :சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆங்கில நாளிதழ் ஒன்றில் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் கடந்த 2019-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கடைசியாகத்தான் சென்று சேர்ந்தது. எனவே எங்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரே ஒரு சீட் மட்டுமே ஒதுக்கி தந்தனர். என்றாலும் நாங்கள் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வெற்றிக்காக தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்தோம்.
இந்த நிலையில் பாராளுமன்ற மாநிலங்களவையில் த.மா.கா.வுக்கு ஒரு இடம் தர வேண்டும் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருந்தோம். மாநிலங்களவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் மீண்டும் நாங்கள் அ.தி.மு.க.விடம் கோரிக்கை விடுத்தோம்.

ஆனால் நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்க வில்லை. எங்களது கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. பதவியை ஒதுக்கி தந்துள்ளது. இதற்காக மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் மாநிலங்களவை எம்.பி. பதவியை பெறுவதற்கு டெல்லியில் உள்ள பா.ஜனதா உதவி செய்ததாக சிலர் சொல்கிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யை தேர்வு செய்ய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்தான் வாக்களிக்க வேண்டும்.
அந்த கூட்டணியில் உள்ள வேறு எந்த கட்சிக்கும் ஒரு எம்.எல்.ஏ. கூட கிடையாது. பா.ஜனதா கட்சிக்கும் ஒரு எம்.எல்.ஏ.வும் இல்லை. அப்படி இருக்கும் போது அவர்கள் தயவால் நான் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டேன் என்பது சரியல்ல.
அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட 3 வேட்பாளர்கள் தேர்வு முழுக்க முழுக்க அ.தி.மு.க. தலைவர்களின் தேர்வாகும். அவர்கள் தங்களது விருப்பத்தின்படியே வேட்பாளர்களை தேர்வு செய்தனர்

அ.தி.மு.க. தலைவர்களை நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் விவசாயிகளின் நலன் பற்றியும், மீனவர்கள் நலன் பற்றியும் விவாதித்துள்ளோம். அப்போது மேல்சபை பதவி பற்றியும் பேசுவோம். இதற்காக நான் கட்சி மாறி விடுவேன் என்று கூட வதந்தி பரப்புகிறார்கள்.
இத்தகைய வதந்திகளில் எந்த உண்மையும் கிடையாது. தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நன்றாக வளர்ந்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் எங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. எனவே தனித்தன்மையுடன் இயங்க த.மா.கா. விரும்புகிறது.
சிலர் நான் பா.ஜனதாவில் சேர்ந்து விடுவேன் என்று வதந்தியை பரப்பி வருகிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் வளர்ந்துவிட கூடாது என்று அவர்கள் இத்தகைய வதந்தியை பரப்புகிறார்கள். அவர்களது பகல் கனவு பலிக்காது.
குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றில் பாதிப்பு வந்தால் சிறுபான்மை மக்களை காப்பாற்றும் முதல் கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் இருக்கும்.
தே.மு.தி.க. மாநிலங்களவை எம்.பி. பதவியை கேட்டது பற்றி உண்மையிலேயே எனக்கு எதுவும் தெரியாது. அவர்கள் அ.தி.மு.க.வுடன் இத்தகைய ஒப்பந்தங்கள் செய்திருந்தனர் என்பதும் எனக்கு தெரியாது.
பாராளுமன்ற மாநிலங்களவையில் ஏற்கனவே நான் எம்.பி.யாக இருந்திருக்கிறேன். அந்த சபை நடவடிக்கைகள் எனக்கு நன்கு தெரியும். நான் ஆளுங்கட்சி கூட்டணியில் இருப்பதால் மாநில அரசுக்கு உதவ முடியும். தமிழக மக்களின் நலனுக்காக என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் மாநிலங்களவை எம்.பி.யாக செய்வேன்.
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக இருந்து தமிழக மக்களுக்கு நன்மைகளை பெற்று தருவேன்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்

கருத்துகள் இல்லை: