புதன், 11 மார்ச், 2020

உளவுத்துறை ரிப்போர்ட்... எல்.முருகனை டிக் செய்த ஜெ.பி. நட்டா!

bjp party tamilnadu new president appointment jp natta bjp party tamilnadu new president appointment jp natta nakkheeran.in - இரா. இளையசெல்வன் : தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 1- ஆம் தேதி முதல் கடந்த 6 மாதங்களாக தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக இருந்தது.
பொன். ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், ஏ.பி.முருகானந்தம், கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன் உள்ளிட்ட பலர் தலைவர் பதவியை கைப்பற்ற பகீரத முயற்சி எடுத்து வந்தனர். 
பாஜகவில் முன்பெல்லாம் தலைவர் பதவிக்கு அவ்வளவாக போட்டி இருக்காது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. அதேபோல் தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் செயல்படும் அதிமுக அரசும் இருந்ததால், பாஜக மாநில தலைவர் பதவிக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது. இதனால், காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியை போன்று பாஜகவிலும் பலர் டெல்லியில் அமர்ந்து தங்களுக்கு தலைவர் பதவி வேண்டும் என்கிற முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், தேசிய எஸ்.சி., எஸ்.டி, ஆணைய துணைத் தலைவராகவும் இருக்கும் எல்.முருகனை தமிழக பாஜக தலைவராக நியமித்திருக்கிறது பாஜக தேசிய தலைமை.

இதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கிறார் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளரான அர்ஜூன் சிங்.  இதுகுறித்து நாம் பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, "பாஜக தலைவர் பதவியை பிடிக்க பலரும் விரும்பினர். பாஜக தலைமையும் தலைவர் நியமனம் குறித்து பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வந்தது. தமிழக தலைவர்கள் சுமார் 12 பேர் கொண்ட பட்டியலை கையில் வைத்திருந்தது. அந்த பட்டியலில் உள்ளவர்கள் குறித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா விசாரித்து வந்தார்.  அந்த பட்டியலிலிருந்த ஒவ்வொருவர் மீதும் ஒவ்வொரு விதமான புகார்கள் உள்ளன. யாரை நியமித்தாலும் கோஷ்டி பூசல் வரும் என உளவுத்துறை பாஜக தலைமைக்கு தெரிவித்திருந்தது. 

பாஜக எப்போதும் உயர் வகுப்பினருக்கான கட்சி என்றும், தலித் வகுப்பினருக்கு எதிரான கட்சி என்றும் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தனர். அதனை உடைக்க வேண்டும் என்றுதான் அகில இந்திய பாஜக தலைமை இந்த முடிவை எடுத்தது" என்கின்றனர். மேலும் தேசிய எஸ்.சி., எஸ்.டி, ஆணைய துணைத் தலைவராக உள்ள எல்.முருகன், பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு நெருக்கமானவர் என்றும் தெரிவிக்கின்றனர்

கருத்துகள் இல்லை: