செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

பாஜக கூட்டணியில் தேமுதிக, அமமுக, ஓபிஎஸ் போட்டியிடும் தொகுதிகள்

zeenews.india.com - S.Karthikeyan :  நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாக வாய்ப்புள்ளது என்பதால் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன.
தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்டன.
குறிப்பாக ஆளும் கட்சியான திமுக, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளையே தொடங்கிவிட்டது. ஆனால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்த அறிவிப்புகள் மட்டும் இன்னும் முடிவாகவில்லை.
அதிமுக பொறுத்தவரையில் பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறது.
பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறது. ஆனால் அந்த கட்சிகள் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே தமிழ்நாடு பாஜக கூட்டணியிலும் இடம்பெற முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. ஜிகே வாசன், அதிமுக - பாஜக சேர்ந்து ஒன்றாக போட்டியிட வேண்டும் என விரும்புகிறார். அதற்காக பாஜக மற்றும் அதிமுக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியையும் அவர் சந்தித்தார்.


ஆனால், அதிமுகவை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இடம்பெறாது என்பதை எடப்பாடி பழனிசாமி அவரிடம் தெரிவித்துவிட்டதாக தெரிகிறது. இருப்பினும் டெல்லியில் இருக்கும் பாஜக மேலிடம், அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வர அனைத்து அஸ்திரங்களையும் வீச தயாராகவே இருக்கிறது. வேலுமணி மூலம் அதிமுக கூட்டணியை உறுதி செய்யவும் முயற்சி கொண்டிருக்கிறதாம். இந்த சூழலில் பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் உத்தேச பட்டியலும், அக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த உத்தேச விவரமும் வெளியாகியுள்ளது.

அதன்படி, பாஜக கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, மயிலாடுதுறை, தர்மபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம் ஆகிய 7 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறதாம். தேமுதிகவுக்கு கள்ளக்குறிச்சி உட்பட  2 தொகுதிகள் கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளது. ஆனால் தேமுதிக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தைக் கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு திருச்சி, சிவகங்கை தொகுதிகளை கொடுக்க முன் வந்திருக்கும் பாஜக, ஓபிஎஸ் மகனுக்கு தேனியை உறுதி செய்துவிட்டதாம். அவர் பாஜக சின்னத்தில் தேனியில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதேபோல், பச்சமுத்துவுக்கு பெரம்பலூர், ஏ.சி. சண்முகத்துக்கு வேலூர், ஜி.கே.வாசனுக்கு தஞ்சை ஆகிய தொகுதிகள் உத்தேசமாக முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். கூட்டணி கட்சிகளுக்கு 16 தொகுதிகளை ஒதுக்கியிருக்கும் பாஜக 23 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடவும் முடிவு செய்திருக்கிறது. இருப்பினும் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்டால் இந்த உத்தேச கணக்குகள் அனைத்தும் மாறும்.

கருத்துகள் இல்லை: