செவ்வாய், 14 செப்டம்பர், 2021

லாபம் - எம்எல்ஏ ஆபிஸில் பணம் எண்ணும் இயந்திரம்... இதுதான் பாஜக... அண்ணாமலைக்கு திமுக எம்.பி பதிலடி.

 Asianet Tami : எம்எல்ஏ அலுவலகத்தில் லாபம் என எழுதி வைத்து பணம் எண்ணும் இயந்திரத்தை வைத்திருக்கிற கட்சிதான் பாஜக என்று  தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார்.
தருமபுரியில் செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தருமபுரியில் பெண் குழந்தைகள் பருவம் அடைந்த பிறகு பள்ளிக்கு செல்வது நிறுத்தப்படுவது அதிகரிக்க பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாதது காரணம்.
எனவே, இதைத் தடுக்க நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பள்ளிக் கல்வியைத் தொடர இதைச் செய்திருக்கிறோம்.
ட்விட்டர் மூலம் பல நல்ல விஷயங்களை என்னால் செய்ய முடிகிறது. என்னுடைய நாடாளுமன்ற செயல்பாட்டில் மத்திய, மத்திய அளவில் முதலிடத்தில் இருக்கிறேன்.
ட்விட்டரில் மற்றவர்களுக்கு உதவுவதிலும் முதலிடத்தில் இருக்கிறேன்.
பாஜக எம்.பி., எம்எல்ஏக்கள் செயல்பாடுகளையும் என்னுடைய செயல்பாட்டையும் பொருத்திப் பார்த்தால் முதலிடத்தில் வருவேன். எம்எல்ஏ அலுவலகத்தில் லாபம் என எழுதி வைத்து பணம் எண்ணும் இயந்திரத்தை வைத்திருக்கிற கட்சிதான் பாஜக.
எம்எல்ஏ அலுவலகத்தில் ஏன் பணம் எண்ணும் இயந்திரம்?
என்னை 23-ஆம் புலிகேசி என்று அண்ணாமலை பேசியிருக்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க படத்தை ஒப்பிட்டு என்னைப் பாராட்டியிருக்கிறார். இதை நான் நல்ல விதமாக எடுத்துகொள்கிறேன். இதனால், முதலில் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தருமபுரியில் குரும்பட்டியான் கொட்டாய் பகுதி பூத்தில் 90 சதவீத வாக்குகளை பாஜக பெற்றதாக அண்ணாமலை பேசியிருக்கிறார். அங்கு பாஜக ஒரே ஒரு ஓட்டுதான் வாங்கியது. அந்த பூத் பாமக கோட்டை. பாஜகவுக்கு பாமகவுக்கும் வித்தியாசம் தெரியாமல் அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.” என்று செந்தில்குமார் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: