செவ்வாய், 24 ஜனவரி, 2012

உக்ரைன் பெண்கள் மேலாடையின்றி போராட்டம்!இந்தியாவின் விசா கட்டுப்பாட்டை எதிர்த்து



கீவ்: இந்திய தூதரகம் உக்ரைன் நாட்டுப் பெண்களுக்கு விதித்துள்ள விசா கட்டுப்பாடுகளைக் கண்டித்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலக கட்டடத்தில் ஏறி மேலாடைகளைக் கழற்றி விட்டு நான்கு உக்ரைன் பெண்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்களது மேலாடைகளைக் கழற்றி விட்டு இவர்கள் நடத்திய போராட்டத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இவர்கள் பெமென் எனப்படும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மத்திய ஆசிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் இளம் பெண்களுக்கு விசா கட்டுப்பாடுகளை இந்தியா அறிவித்துள்ளது. செக்ஸ் சுற்றுலா, விபச்சாரம் மற்றும் இளம் பெண்கள் கடத்தல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில், 15 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை இந்தியத் தூதரகம் விதித்துள்ளது. இதைக் கண்டித்தே இந்த நூதனப் போராட்டம்நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களும் மேலாடையின்றி, உக்ரைன் பெண்கள் விபச்சாரிகள் அல்ல என்ற பேனர்களை ஏந்தியபடி போராட்டம் நடத்தினர். இந்திய தேசியக் கொடியையும் அவர்களில் ஒருவர் கையில் ஏந்திப் பிடித்திருந்தார்.

போராட்டம் நடத்திய பெண்கள் கூறுகையில், இந்திய தூதரகத்தின் விசா கட்டுப்பாட்டைப் பார்த்தால் ஏதோ உக்ரைன் நாட்டுப் பெண்கள் எல்லோருமே விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் என்ற கருத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கண்டனத்துக்குரியது என்று அவர்கள் கூறினர்.

இந்தப் பெண்கள் ஏற்கனவே இதுபோல பலமுறை நிர்வாணப் போராட்டத்தை நடத்தியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இதற்கு முன்பு, இத்தாலி பிரதமராக இருந்த சில்வியோ பெர்லுஸ்கோனியின் செக்ஸ் லீலைகளைக் கண்டித்து இத்தாலி நாட்டுத் தூதரகம் முன்பு நிர்வாணப் போராட்டம் நடத்தி அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: