திங்கள், 23 ஜனவரி, 2012

நடிகர் விஷால் மீது நடிகை ராதிகா ரூ 9 கோடி மோசடி புகார்!!


Radhika and Vishal
சென்னை: வெடி பட விவகாரத்தில் ரூ 9 கோடி செக் மோசடி செய்து விட்டதாக நடிகர் விஷால் மீது புகார் கொடுத்துள்ளார் நடிகை ராதிகா.
விஷால் - சமீராரெட்டி ஜோடியாக நடித்த படம் வெடி. ஜிகே பிலிம் கார்ப்பொரேஷன் சார்பில் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரித்தார். பிரபுதேவா இயக்கினார்.
இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீசானது. இதனை விநியோகம் செய்யும் பொறுப்பை நடிகை ராதிகாவின் ராடான் டி.வி. நிறுவனம் ஏற்றது. இதற்காக அந் நிறுவனத்துக்கு ரூ.12 கோடி தருவதாக விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் போட்டு கொடுத்ததாகவும். அதில் ரூ. 9 கோடியை தற்போது தர மறுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இது குறித்து நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் விஷால் மீது நடிகை ராதிகா புகார் செய்துள்ளார். அந்த புகார் மனுவில், "விஷாலின் வெடி படத்தை விநியோகம் செய்து கொடுக்கும் பணிகளை ராடான் நிறுவனம் செய்து கொடுத்தது. இதற்காக விஷால் ரூ.12 கோடி தருவதாக ஒப்புக் கொண்டார்.

அந்த ஒப்புதலை கடிதமாகவும் எழுதிக் கொடுத்தார். படத்துக்கான சாட்டிலைட் உரிமை மூலம் ரூ.3 கோடி கிடைக்கிறது. அந்த தொகை போக மீதி ரூ.9 கோடிக்கு விஷால் கையெழுத்திட்டு செக் கொடுத்தார்.

அந்த செக்கை வங்கியில் செலுத்திய போது பணமின்றி திரும்பி வந்து விட்டது. இதன் பிறகு பல முறை விஷாலை தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கேட்டும் அவர் தரவில்லை. எனவே விஷாலிடம் இருந்து ரூ.9 கோடி பணத்தை வாங்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து விஷாலிடம் விசாரணை நடத்த நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் முடிவு செய்துள்ளது.

ராதிகாவின் கணவர் சரத்குமார் நடிகர் சங்கத் தலைவராகவும், சகோதரர் ராதாரவி சங்கத்தின் செயலாளராகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: