புதன், 25 ஜனவரி, 2012

ஒப்பனை கலைந்த வாழ்க்கை – பாலாமணியம்மாள்


19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆண்கள் பெண்வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்த நிலை மாறி பெண்கள் மேடையேறி நடிக்க வந்தனர். பி. ஜானகி அம்மாள், பி. இரத்தினாம்பாள், வேதவல்லித் தாயார், விஜயலட்சுமி கண்ணாமணி, பி. இராஜத்தம்மாள் போன்றோர் வரிசையில் செல்வி. பாலாமணி அம்மாள் குறிப்பிடத்தக்கவர்.
அந்தக் காலக்கட்டத்தில் புகழ்வாய்ந்து இருந்த மொத்த நாடக சபைகள் அறுபத்து ஒன்பது. அவற்றில் ஆறுசபைகளைப் பெண்களே ஏற்று நடத்தி வந்தனர். அவற்றுள் ஒன்று செல்வி. பாலாமணி அம்மாளும் அவருடைய சகோதரி ராஜாம்பாளும் இணைந்து நடத்திய ‘பாலாமணி அம்மாள் நாடகக் கம்பெனி’ ஆகும். இதில் முழுவதும் பெண்களே இடம்பெற்றிருந்தனர். மொத்தம் 70 பெண்கள்.

திருமணம் தன் நாடக வாழ்வைப் பாதிக்கும் என்பதால் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இவர் காசி விசுவநாத முதலியாரின் டம்பாச்சாரி விலாசத்தை (தமிழில் முதல் சமூக நாடகம்) மீண்டும் மீண்டும் அரங்கேற்றிப் பேரும் புகழும் பெற்றதுடன் நல்ல வருமானத்தையும் ஈட்டினார். அக்காலத்திலிருந்த பெண்களின் நாடகச் சபைகளில் இவரது சபைதான் மிகவும் புகழ்பெற்றது. செல்வி. பாலாமணி அம்மாளை மக்கள் ‘நாடக அரசி’ என்று மெச்சினர். கி.பி., 1880 – 1890களில் அவர் மிகப்புகழோடு இருந்தார். நாடகங்களால் ஈட்டிய பணத்தில், பெரும் பகுதியை கோவில் திருப்பணிகளுக்கும், ஆதரவற்ற பெண்களுக்குமே செலவிட்டார். குடந்தை கும்பேஸ்வரர் கோவிலிலுள்ள திருமண மண்டபம் இவர் பெயரில் உள்ளது.
நாடகங்களில் பலவற்றை முதலாவதாகவும் புதுமையாகவும் செய்த பாலாமணி அம்மாளின் நாடகங்களைக் காண பார்வையாளர்கள் பெருமளவில் கூடுவர். கும்பகோணத்தில் இவரது நாடகம் இரவு ஒன்பதரை மணிக்கு ஆரம்பமாகும். இதற்காகவே சிறப்பு ரயில் ஒன்று 40 கி.மீ. தொலைவில் உள்ள மாயவரத்திலிருந்து விடப்பட்டது. அது மாயவரத்திலிருந்து இரவு எட்டு மணிக்கு ஒரு ரயில் கும்பகோணத்திற்கு வரும். அதேபோல எட்டரை மணிக்கு திருச்சியிலிருந்து ஒரு ரயில் வரும். அந்த ரயில்கள், கும்பகோணத்தில் நின்று விட்டு, இரவு மூன்று மணிக்கு மீண்டும் புறப்பட்டு, மாயவரத்துக்கும், திருச்சிக்கும் போய்விடும். பாலாமணி நாடகங்களைப் பார்க்க ரசிகர்களுக்காகப் பிரத்யேகமாக விடப்பட்ட காரணத்தால் அந்த ரயில்களை, ’பாலாமணி ஸ்பெஷல்’ என்று அழைத்தனர்.
‘தாரா சசாங்கம்’ என்ற நாடகத்தில் அவர் கதாநாயகி தாரையாக வந்து, காதலன் சந்திரனுக்கு எண்ணெய் தேய்த்து விடுவதாக ஒரு காட்சி வரும். குறிப்பாக  ’உடலில் உடையின்றி எண்ணெய் தேய்த்துவிட வேண்டும்’ என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதான காட்சியாக அது அமைந்திருந்தது. அக்காட்சியைக் காண்பதற்காகப் ‘பாலாமணி ஸ்பெஷல்’ ரயிலில் வந்திறங்குவர். அக்காட்சியில் அவர் உடலோடு ஒட்டிய துணியினை அணிந்திருப்பது பார்வையாளர்களுக்குத் தெரியாது. இந்த நாடகம் பற்றி 08.07.1928ஆம் நாளிட்ட குடி அரசு இதழில் உரையாடல் வடிவில் நகைச்சுவையுடன் கூடிய சமுதாயச் சிந்தனை, புராணம் சார்ந்த விழிப்புணர்வுக் கட்டுரை இடம்பெற்றுள்ளது.
“கும்பகோணத்தில், பாலாமணியின் வீடு பெரிய அரண்மனை போல இருக்கும். வீட்டில், ஆண்களும், பெண்களுமாக 50, 60 பணியாட்கள் இருப்பர். கல்யாண வீடு போல தினமும் சமையல் நடக்கும். நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட்டு வண்டியில்தான் பாலாமணி அம்மாள் போவார். வெல்வெட் திரைச் சீலைகளால் அதன் பக்கவாட்டுப் பகுதிகள் மூடப்பட்டிருக்கும். வண்டியைக் காண்பதன் மூலமே மானசீகமாக பாலாமணியைப் பார்த்தது போல இளைஞர்கள் மட்டுமல்ல, முதியவர்களும் பெருமூச்சு விடுவர். அவரை நாடகங்களில் ஒப்பனையுடன் தானே பார்க்கிறோம். நேராகப் பார்க்க வேண்டுமென்று நீண்ட தூர கிராமங்களிலிருந்து மக்கள் மாட்டு வண்டிகளிலும், கால்நடையாகவும் வந்து, அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பர். இப்படியே தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் நிற்பர். பாலாமணியின் வீட்டு முன்புறம் மாடியில் ஒரு பெரிய உப்பரிகை இருக்கும். அங்கு சென்று பாலாமணி தன்னுடைய தலைக் கேசத்தை கோதி, அது காய்வதற்காக அங்குமிங்கும் நடப்பார். வாசலில் நின்று கொண்டிருக்கும் மக்கள், பாலாமணியை வானிலிருந்து இறங்கிய தேவதை என நினைத்து, திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருப்பர்” என்று நடிகர் எம்.கே.ராதா குறிப்பிட்டுள்ளார்.
தான் ஈட்டிய பணத்தில் எதிர்காலத்திற்கென ஏதும் அவர் சேமித்துவைக்கவில்லை. நோய்வாய்ப்பட்டு மதுரைக்குச் சென்று ஒரு சிறிய குடிசை போன்ற இடத்தில் தங்கினார். நாடகக் குழுவில் உடனிருந்த மற்ற பெண்கள் எல்லாம் வெவ்வேறு இடங்களுக்குச்  சென்று விட்டனர். அறுபத்து ஐந்து வயதில் செல்வி. பாலாமணியம்மாள் இறந்தார்.   நாடக நடிகர்களின் எளிய நிதியுதவியோடு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பார்வை:
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF
http://www.tamilvu.org/courses/degree/p203/p2034/html/p2034113.htm
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=4676&ncat=2
http://cinema.natpu.in/thiraippadam/cinebits/padal.php
http://www.tamilvu.org/courses/degree/p102/p1024/html/p1024112.htm
http://www.tamilvu.org/courses/degree/p203/p2034/html/p2034332.htm
http://amuthamthamizh.blogspot.com/2010/12/blog-post_13.html
http://periyardk.org/PHP/Details.php?key1=Kudiyarasu&key2=1928&fileName=Jul&cCount=2
முனைவர் ப. சரவணன்

கருத்துகள் இல்லை: