ஞாயிறு, 4 டிசம்பர், 2022

உழைத்தவனுக்கு பதவியில்லை : ஆர்.எஸ்.பாரதியின் கலகக் குரல்!

minnambalam.com  :   Kavi  : கட்சிக்கு விசுவாசமாக இருந்தாலும் அவ்வளவு எளிதில் பதவி கிடைக்காது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
சென்னை ஆர்.ஏ.புரம் தனியார் விடுதியில் மறைந்த முன்னாள் எம்.பி ஜின்னாவின் படத் திறப்பு நிகழ்வில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார்.
அப்போது ஜின்னாவை நினைவுகூர்ந்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, “எமர்ஜென்சி நேரத்தில் கலைஞரை விட்டுவிட்டு எல்லோரும் ஓடிவிட்டார்கள். மந்திரியாக இருந்தவர்களும் ஓடிவிட்டனர். கட்சி மாறினர்.
இந்த நேரத்தில் இதை நான் சொல்லியாக வேண்டும். தன்னந்தனியாக கலைஞர் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவரது கார் ஓட்டுநர் கூட சாவியைக் கொடுத்துச் சென்றுவிட்டார். வேலூர் சிறையிலிருந்து நான் ரிலீசாகி வந்ததும், ஒருவருட காலம் கலைஞரோடு இருந்தேன்” என்றார்
மேலும் அவர், “உழைத்தவர்களுக்கெல்லாம் சீட் கிடைக்கவில்லை. உழைக்காதவர்கள் எல்லாம் வந்து உட்கார்ந்துகொண்டனர். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் நானும் ஜின்னாவும் தான். நாங்கள் கொண்டு வந்து சேர்த்துவிட்டவர்கள் எல்லாம் மந்திரி ஆனார்கள், எம்.பி ஆனார்கள். எங்களுக்குக் காலதாமதமாகத்தான் வந்தது.
காரணம், ஒரே கொடி, ஒரே தலைவர் என்று இருந்தோம். பொறுமையாக இருந்தால் என்றாவது ஒருநாள் பதவி வந்தே தீரும். எனக்கு 63 வயதில் தான் எம்..பி.பதவி கிடைத்தது.
இதை எல்லாம் ஜீரணித்துக் கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும். ஒரு கட்சிக்கு வந்துவிட்டோம் என்றால் கடைசி வரை விசுவாசமாகத்தான் இருக்க வேண்டும். அதை விட பெரிய கிரெடிட் தேவையில்லை. அதுதான் பெருமையும் கூட அதைதான் ஜின்னா இங்கே படமாக இருந்து பாடமாக உணர்த்திக் கொண்டிருக்கிறார்” என குறிப்பிட்டார் ஆர்.எஸ்.பாரதி.
பிரியா

கருத்துகள் இல்லை: