செவ்வாய், 6 டிசம்பர், 2022

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

tamil.oneindia.com  -  Vigneshkumar  :  வேலூர்: தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான அமைச்சர் துரைமுருகன் அண்ணன் மகள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மூத்த அமைச்சர்களில் ஒருவர் துரைமுருகன். திமுக பொதுச்செயலாளராக உள்ள துரைமுருகன் காட்பாடியில் வசித்து வருகிறார்.
இப்போது தமிழக அரசில் நீர்வளத்துறை அமைச்சராக உள்ள துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவர் மறைந்து ஓராண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
துரை மகாலிங்கத்தின் மகள் பாரதி.. 55 வயதான இவர் தனது கணவர் ராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருடன் காட்பாடி காந்தி நகர்ப் பகுதியில் வசித்து வந்தார். பாரதியின் கணவர் ராஜ்குமார் காட்பாடி சிக்ல்மில் பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் லத்தேரி அருகே ரயிலில் அடிப்பட்டு பாரதி உயிரிழந்தார். லத்தேரி பகுதியில் சடலம் இருப்பது தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு ரயில் போலீசார் அங்கு உடனடியாக விரைந்தனர்.

அங்குத் தண்டவாளத்தில் கிடந்த பாரதியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு ரயில்வே போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசணரையை தொடங்கினர். விசாரணையில் பாரதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துரைமுருகனின் அண்ணன் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை: