செவ்வாய், 6 டிசம்பர், 2022

முஸ்லிம் பெண்களுக்கு தேர்தல் சீட் தருவது மதத்திற்கு எதிரானது – இமாமின் கருத்து


 விகடன் தமிழினி  :  முஸ்லிம் பெண்களுக்கு தேர்தல் சீட் தருவது மதத்திற்கு எதிரானது – இமாமின் கருத்து தால் சர்ச்சை
குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்குள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இருக்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது. மீதமுள்ள தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஜம்மா மசூதியின் தலைமை மத குருவான ஷாஹி இமான் தேர்தல் குறித்தும் அதில் இஸ்லாமிய பெண்கள் போட்டியிடுவது குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.


அவர் தனது பேட்டி ஒன்றில், “பெண்களுக்கு இஸ்லாம் மதத்தில் ஒரு பிரத்தியேக இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் தான் பெண்கள் மசூதிக்கு வந்து நமாஸ் படிப்பதில்லை. இஸ்லாமில் மிக முக்கியமான அம்சமானது நமாஸ் ஆகும். அப்படியிருக்க அனைவருக்கு முன்னாளும் பெண்கள் வரலாம் என்றால் மசூதிக்கு வந்து நமாஸ் படிக்க அனுமதிக்கப்படுவார்கள் அல்லவா.

எனவே, தேர்தலில் பெண்கள் போட்டியிடுவது இஸ்லாம் மதத்திற்கு எதிரானது. தேர்தலில் வாக்கு சேகரிக்க வீடு வீடாக செல்ல வேண்டும். இந்து முஸ்லிம் அனைவரையும் பார்க்க வேண்டி வரும். இந்த செயலை முற்றிலும் நான் எதிர்க்கிறேன். இஸ்லாம் சமூகத்தில் ஆண்களே இல்லையா என்ன. எனவே, இஸ்லாம் சமூகத்தில் உள்ள ஆண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தாருங்கள். பெண்களுக்கு சீட் தருவதன் மூலம் இஸ்லாம் மதத்தை வலுவிழக்க செய்கிறீர்கள்” என்று பரபரப்பு கருத்தை இமாம் தெரிவித்துள்ளார்.

இமாம் ஷாஹியின் கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் முதலமைச்சர்களாகவே இருந்துள்ளனர் எனக் கூறி இமாம் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ளனர். அசாமின் அன்வரா தைமூரும் ஜம்மு காஷ்மீரின் மெகபூபா முஃப்தியும் இஸ்லாம் சமூகத்தில் பிறந்து முதலமைச்சராக இருந்தவர்கள்.

கருத்துகள் இல்லை: