புதன், 4 மார்ச், 2015

ராஜ்யசபாவில் மோடி அரசுக்கு எதிரான தீர்மானம் வெற்றி ! பாஜக அரசுக்கு பெரும் தர்மசங்கடம்

கறுப்புப் பணத்தை மீட்கும் விவகாரத்தில், அரசின் நடவடிக்கை அதிருப்தியளிப்பதாக கூறி, ராஜ்யசபாவில், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து கொண்டு வந்த தீர்மானம் வெற்றியடைந்தது; இது, பா.ஜ.,வுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது, நேற்று ராஜ்யசபாவில், பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து பேசினார். பிரதமர் பேசி முடித்ததும், பொதுவாக, ஜனாதிபதி உரையை ஒருமனதாக நிறைவேற்றுவது வழக்கம். ஆனால், நேற்றைய பிரதமரின் பதிலுரையின் போது, சரத்யாதவ், மாயாவதி போன்றவர்கள் இடைமறித்த போது, அவர்கள் பேசுவதற்கு, நரேந்திர மோடி வழிவிட்டார். ஆனால், மார்க்சிஸ்ட் எம்.பி.,யான சீத்தாராம் யெச்சூரி பேச முயற்சித்த போது, பிரதமர் ஏற்கவில்லை. ஆனால், சீத்தாராம் யெச்சூரியோ, நேற்று அதிரடியாக செயல்பட ஆரம்பித்தார். தான் வலியுறுத்தியிருந்த திருத்தத்தை, ஓட்டுக்கு விட வேண்டுமென்று, பிடிவாதம் காட்டினார். இதையடுத்து, வேறுவழியின்றி, சீத்தாராம் யெச்சூரி கொண்டுவந்த திருத்தங்கள், ஒவ்வொன்றின் மீதும், ஓட்டெடுப்பு நடத்தும்படி சபைத் தலைவர் ஹமீத் அன்சாரி உத்தரவிட்டார்.  அந்த திருத்தப்பட்ட தீர்மானத்தில் உள்ள வார்த்தை இவர்களுக்கு ஒரு அவமான சின்னம், " the government has failed to stop corruption & bring back black money" . இது தான் அந்த வார்த்தை....
அவற்றில், 'கறுப்பு பணத்தை மீட்கும் விவகாரத்தில், மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக இல்லை' என்ற, திருத்தம் முக்கியமானது.இதன்மீது, எம்.பி.,க்கள் ஓட்டளித்து முடித்த போது, ஆளும் தரப்புக்கு, வெறும் 57 ஓட்டுகளே கிடைத்தன. எதிர்க்கட்சிகள் அனைத்தும், ஒன்று சேர்ந்து, 118 ஓட்டுகளை பெற்று, தீர்மானத்தை வெற்றி பெற வைத்தன. இதை, மத்திய அரசுக்கு தோல்வி என்று கூற முடியாவிட்டாலும் கூட, பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே கூற வேண்டும். லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் எல்லாம், அடுத்த வாரம், ராஜ்யசபாவுக்கு வரவுள்ளன. எதிர்க்கட்சி களின் இதே ஒற்றுமை நீடித்தால், அந்த மசோதாக்களின் கதி என்ன வேண்டுமானாலும் ஆகலாம் என்பதால், புதிய பரபரப்பு உருவாகி உள்ளது.

- நமது டில்லி நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: