திங்கள், 2 மார்ச், 2015

மாயாண்டி பாரதி ! உண்மையும் நேர்மையும் தேசபக்தியும் நிரம்பிய ஐ.மா.பா.!

அவரை எப்போதும் 'அப்பா’ என்றுதான் அழைப்பேன். நிறையத் தோழர்கள், நண்பர்கள் அப்படித்தான் அழைப்பார்கள். குழந்தைகள் இல்லை. 3 ஆண்டுகளுக்கு முன் அவரது மனைவி இறந்துபோகிற வரை ஒன்றாகவே இருவரும் வாழ்ந்தார்கள். அவருக்குப் பிடித்த கடையில் இருந்து உணவு வாங்கி வந்து நான், அவர், அம்மா என்று மூன்று பேரும் ஒன்றாகச் சாப்பிடுவோம். விடுதலைப் போராட்டம், விடுதலைக்குப் பிந்திய போராட்டங்கள் குறித்து அவருக்கு முழுமையான அனுபவ அறிவு இருந்தது. அவருக்குத் தெரியாத நிகழ்வுகள் குறித்து நாம் கேட்டால், ''அன்னிக்கு நாம் போகல; எனக்குத் தெரியாது... ஆனா போனவங்க சொன்னதை வேனா உனக்குச் சொல்றேன்'' என்று விவரிப்பார். எத்தனை முறை கேட்டாலும், சலிக்காமல் திரும்பிச் சொல்வார். வருடம், மாதம், தேதி என்று எந்தப் பிழையுமின்றி துல்லியமாகச் சொல்வார்.

லோகசக்தி, பராசக்தி, லோகோபகாரி, நவசக்தி, தீக்கதிர் என்று வாழ்நாள் முழுவதும் பத்திரிகைப் பணியில் இயங்கியவர். ஒரு பத்திரிகையாளனுக்கு இருந்தே தீர வேண்டிய உண்மையின் ஒளியோடுதான் எழுதுவார்; பேசுவார். வரலாற்றைச் சொல்வதில், கற்றுத் தருவதில் ஒப்பற்ற மனிதர். அந்த மனிதர் ஐ.மாயாண்டி பாரதி. ஒரு நூற்றாண்டைத் தொடுவதற்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் இருக்கும் நிலையில் கண்மூடிவிட்டார்!
''அந்தக் காலத்துல... நாங்கல்லாம்'' என்று ஆரம்பித்தால், கண்களில் ஒளியேறப் பேசுவார். ஒரு வரலாற்று நிகழ்வை கண் முன்னே தோன்றச் செய்துவிடுவார். 13 ஆண்டு கால சிறைவாசம் அவருடையது. விடுதலைப் போரில் சேர்ந்த நாளில் இருந்து, இறுதிவரை கதர்தான் அணிந்தார். ''இது வெறும் துணியல்ல; அரசியல் சீருடை'' என்றார், கண்களில் பெருமிதத்துடன்.
வீட்டைவிட்டுப் புறப்படுகிறபோது கையில் ஒரு மஞ்சள் பையை எப்போதும் பிடித்திருப்பார். அதில் எப்போதும் புத்தகங்கள், பிரசுரங்கள் வைத்திருப்பார். படிக்கிற பழக்கமிருக்கிற ஆளாகப் பார்த்துத்தான் புத்தகங்கள் தருவார். படிக்கிற பழக்கமில்லாதவர்கள் கேட்டால், ''உனக்கு எதுக்கு? நீதான் படிக்க மாட்டியே?'' என்று முகத்துக்கு நேரே சிரித்தபடியே சொல்லி விடுவார்.
அதே மஞ்சள் பையில் எப்போதும் ஆரஞ்சு மிட்டாய்களும் புளிப்பு மிட்டாய்களும் வைத்திருப்பார். எந்த நிகழ்வுக்கு வந்தாலும், அந்தப் பகுதியில் கூடி நிற்கும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பார். ''இது எதுக்குப்பா?'' என்று கேட்டபோது, ''மிட்டாய் கொடுத்தாதான் குழந்தைங்க நம்மகிட்ட வரும். அவனுக வந்துட்டா, பேசி தேச பக்தியை ஊட்டலாம்; வரலாறு பூரா சொல்லித் தரலாம்'' என்பார். எங்கும், எப்போதும் யாருக்கேனும் கற்பித்துக்கொண்டே இருக்கணும் அவருக்கு. நானும் அவரைப் பார்த்ததும் மிட்டாய் கேட்பேன். ''உனக்கு எதுக்குடா?'' என்பார். ''நானும் உங்ககிட்டக் கத்துக்குறேன்ல'' என்பேன். உதடுகள் பிரியாமல் சிரித்துக்கொண்டே, ஒரு மிட்டாயை எடுத்துக் கொடுப்பார்.
நிறைய புத்தகங்கள் வைத்திருந்தார். புத்தகத்தின் முதல் பக்கத்தில் புத்தகம் வாங்கிய ஊர், வருடம், தேதி எல்லாம் குறித்திருப்பார். பல புத்தகங்களில் ''காசு கொடுத்து வாங்கியது'' என்றும் எழுதி இருப்பார். ''இது எதுக்கு எழுதுறீங்க?'' என்று கேட்டபோது, ''திருடல... என் காசு போட்டு வாங்குனதுன்னு இத எடுக்குறவனுக்குத் தெரியணும்'' என்பார்.
2005-ம் ஆண்டு ஜனவரியில், கீழ்வெண்மணி குறித்த எனது ஆவணப் படத்துக்காக, அவரைப் பேட்டியெடுக்கப் போனேன். ஒரு நாள் முழுவதும் அவரோடு இருந்த அற்புதம்... அந்த நாள். பேட்டியின் இறுதியில் சொன்னார். ''அதே 44 பேரு எரிஞ்ச இடத்துல இருந்து ஒரு கைப்பிடி எலும்பும், சாம்பலும் நிறைய எடுத்து ஒரு பேப்பர்ல கட்டி வெச்சுக்கிட்டேன்'' என்றார். நான் அதிர்ந்தேன். உலக வரலாற்றில் 37 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட முகமறியாத அந்த எளிய, ஏழை மக்களின் அஸ்தியை யாரால் கண்டறிய முடியும்? அவர் காப்பாற்றி வைத்திருந்தார்.
நீண்ட நேரம் தேடி அதைக் கண்டெடுத்தார். அவர் கைப்பட 'வெண்மணி அஸ்தி’ என்று எழுதி இருந்த சிறிய பொட்டலத்தை என்னிடம் தந்தார். பிரிக்கச் சொன்னார். கொஞ்சம் எலும்புத் துண்டுகள். கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தார். ''குருத்தெலும்பா இருக்குடா... ஏதோ ஒரு குழந்தையோடதாகத்தான் இருக்கும்.. கொடுமைக்கார பாவிங்க'' என்றார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அவர் அழுது அன்றுதான் பார்த்தேன். ''ஒப்படைச்சுட்டேன்... சேக்க வேண்டிய இடத்துல சேத்துரு'' என்று ஒரு பெருமூச்சு விட்டார். அதைக் கீழ்வெண்மணியில், அந்தத் தியாகிகளின் நினைவிடத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தேன். அங்கு அது பத்திரமாக இருக்கிறதுdiv dir="ltr" style="text-align: left;" trbidi="on">

தனது செயல், பேச்சு, எழுத்து இவற்றின் மூலம், அனைவரையும் விடுதலையின்பால், சமத்துவத்தின் பால் ஈர்க்கும் திறவுகோலாக மனத் தடையை உடைக்கும் சாவியாக அவர் இருந்தார். ஆனால், அவர் மனதைத் திறக்கும் சாவியை அவர் யாரிடமும் தரவேயில்லை. எவ்வளவு பேசினாரோ, அவ்வளவுக்கும் அதிகமாக ரகசியங்களைத் தனக்குள் வைத்திருந்தார்.
வெண்மணி நினைவு தினக் கூட்டமொன்றுக்கு அவரும் நானும் சிறப்புரையாற்ற அழைக்கப் பட்டிருந்தோம். இரவு 7.30 மணிக்குக் கூட்டம். நான் பேசப் போவதற்கு முன் என்னை அழைத்து, ''இந்த அநீதிக்குப் பழி தீர்ப்போம், வரலாறு பதில் சொல்லும்; நியாயம் கேட்போம்னு உணர்ச்சி வசப்பட்டு எதுவும் பேசாதே... மிராசுதார்களைப் பத்தி எதுவும் பேசாதே... மத்தது எல்லாம் பேசிக்க'' என்றார்... ''எதுக்குப்பா?' என்றேன். ''சொன்னதைச் செய்யுடா'' என்று சொல்லிவிட்டார். எனக்குப் பிறகு அவர் பேசி முடித்தார். இரவு உணவருந்துகிற போது மீண்டும் கேட்டேன். பதில் எதுவும் சொல்லவில்லை. மறுநாள் தெரிந்தது. வெண்மணி வழக்கில் முதல் குற்றவாளியான இரிஞ்சியூர் கோபாலகிருஷ்ண நாயுடு முந்தினநாள் மாலை 5.30 மணிக்குக் கொல்லப்பட்டிருந்தார்.
''மிக விரைவானத் தகவல் தொடர்புகள் ஏதுமற்ற அந்த நாட்களில், அன்றைக்கே உங்களுக்கு அந்தச் செய்தி எப்படித் தெரியும்?’ என்று  பலமுறை கேட்டிருக்கிறேன். பதிலே சொன்னதில்லை. எனக்குத் தெரியும், அவர் ரகசியங்களின் பெட்டகமாகவும் இருந்தார்.

இறப்பதற்கு சில மாதங்கள் வரை, தனது வேலைகளைத் தானே பார்த்துக்கொண்டார். 2015 ஜனவரி 26ம் தேதியன்று குடியரசு தினத்துக்குக் கொடியேற்றுகிற விழாவுக்குப் புறப்படுகிற அவசரத்தில் கீழே விழுந்து படுக்கையானார். அதுவே அவருக்கு மரணப் படுக்கையாயிற்று. திருப்பூர் குமரனுக்கு நினைவுச்சின்னம் வேண்டுமென்று கோரிக்கை வைத்தது அவர்தான்.
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக சகாயத்தை நேரில் பார்த்து, தனது ஆதரவைச் சொன்னவரும் அவர்தான். கனிமவளக் கொள்ளை பற்றிப் பேசுகிறபோது ஒருமுறை சொன்னார், 'மலை முழுங்கி மகாதேவனுங்கள... சும்மாவிடக் கூடாது... அது நம்ம சொத்து...' என்று சொல்லிவிட்டு, ''பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ..'' என்று பாரதியின் பாடலை முழுவதுமாகப் பாடினார்.
''வெள்ளைக்காரன் என்னைப் புடிச்சி கோர்ட்ல நிறுத்திட்டான்.. 42-ல... ஜாமீன்ல விட்றதுக்காகவோ, எதுக்காகவோ... உனக்கு என்ன சொத்து இருக்குன்னு அந்த வெள்ளைக்கார நீதிபதி கேட்டான். 'மீனாட்சியம்மன் கோயிலு, மங்கம்மா சத்திரம், ரயில்வே ஸ்டேஷன் எல்லாமே என் சொத்து தான்னு சொன்னேன்''... ரொம்பப் பேசுறன்னுகூட 6 மாசம் போட்டான். எல்லாமே நம்ம சொத்து, ஜனங்க சொத்து. அது நாலு பேரு களவாண்டு சாப்புட்டா... பாத்துட்டு இருக்கலாமா? இருக்கக் கூடாதுடா'' என்றார் உறுதியும் உண்மையும் தேச பக்தியும் நேர்மையும் நிரம்பிய ஐ.மாயாண்டி பாரதி.
அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தப் போனேன்... குளிரூட்டப்பட்ட பெட்டிக்குள் இருந்தார் 'அப்பா’. ஏதோ கோபத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டதுபோல் படுத்திருந்தார். அவரது உறவினர்கள், நண்பர்கள், தோழர்கள் என்று அஞ்சலி செலுத்த வந்தவர்களிடையே, ஓரிரு சுதந்திரப் போராட்ட வீரர்களும் இருந்தனர்.
ஒரு வீரம் மிகுந்த, தியாகம் புரிந்த தலைமுறையின் இறுதி மிச்ச சொச்சமாக, முதுமையும் வறுமையும் ஒருசேரத் தாக்கப்பட்ட மனிதர்களாக இருந்தார்கள்.
இறுதிநாட்களில், ஐ.மா.பாவின் மருத்துவச் செலவுக்குப் பணமின்றித் தவித்திருக்கிறார்கள் அவரது உறவினர்கள். இறுதி மரியாதை செலுத்த வந்த அதிகார வர்க்கம், நோயுற்ற நாட்களில் எங்கே போய் இருந்தது? உள் நெருப்பில் உயிரோடு எரிகிற உலைக்கு அரிசி போடாமல், செத்த பிறகு வாய்க்கரிசி போடுவதை இவர்கள் எப்போது நிறுத்துவார்கள்? மாநிலம் முழுவதும் தேடினாலும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஓராயிரம், இரண்டாயிரம் பேர்தான் இருப்பார்கள். அவர்களை ஓர்அரசாங்கம் தத்தெடுக்க வேண்டாமா? இனியாவது செய்யுங்கள்.
போன மாதம் மதுரை போய் இருந்தேன். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டுப் புறப்படுகிறபோது ஒரு நண்பர் வந்தார். ''ஐ.மா.பா... ஆஸ்பத்திரில இருக்காரு... உங்களை வரச் சொன்னாரு'' என்றார்.பணிகள் காரணமாகப் போக இயலவில்லை. ''அடுத்த தடவை பார்க்குறேன்னும் சொல்லுங்க'' என்றேன். அடுத்த முறை அஞ்சலி செலுத்தத்தான் முடிந்தது. வயதில் மூத்தவர்கள் அழைத்தால், உடனே போய்ப் பார்த்துவிட வேண்டும். அந்த அழைப்பை ஒத்திப்போடக் கூடாது என்கிற பாடத்தைத் தன் மரணத்தின் வழியே எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார் ஐ.மா.பா. வாழ்நாள் முழுவதும்  கற்றுக் கொடுத்துவிட்டு, மரணத்திலும் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள் அப்பா.
இனி ''வாடா... போடா'' என்று ஒருமையில் உரிமையில் யார் அழைக்கப் போகிறார்கள்? ''மிட்டாய் குடுங்கப்பா'' என்று குழந்தை மாதிரி யாரிடம் கேட்க முடியும்? மன்னித்துக் கொள்ளுங்கள் அப்பா. உங்களிடம் கற்றதை, மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிற வேலையை, பிழையின்றி செய்ய வேண்டும். அப்படிச் செய்வது தான் உங்களுக்கான அஞ்சலி!
பாரதி கிருஷ்ணகுமார்  vikatan.com

கருத்துகள் இல்லை: