செவ்வாய், 3 மார்ச், 2015

திருமணவீட்டில் அழகிரியும் கலைஞரும் ஏன் பேசவில்லை ? அஞ்சா நெஞ்சனின் சுயமரியாதை?

சென்னை: குடும்ப விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்தும் பேசாமல் தவிர்த்தார் மு.க.அழகிரி. கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசு மகன் நிச்சயதார்த்த விழா சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் கருணாநிதி, ராசாத்தி அம்மாள், தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், தி.மு.க. மாநில மகளிர் அணி செயலர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, காந்தி அழகிரி, முரசொலி செல்வம், செல்வி என கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர் இந்த விழாவிற்காக முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, நேற்று பகலே மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து விட்டார். விழாவில், அழகிரி தனது குடும்பத்தினருடன் விழா மேடைக்கு எதிரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது தந்தையும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி வந்தார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த கருணாநிதி, அதன் பின் கிளம்பி சென்றார்.


இந்த விழாவின் மூலம் பிரிந்த உறவுகள் மீண்டும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கருணாநிதி வந்தது முதல் அவர் புறப்பட்டு செல்லும் கடைசி நிமிடம் வரை அழகிரி, அவரை சந்தித்து பேசவில்லை. இதேபோல், அழகிரி வந்திருப்பது தெரிந்தும் அவரை கடைசி வரை கருணாநிதி அழைத்து பேசவும் இல்லை.

ஆனால், விழா முடிந்து வீடு திரும்பும்போது ராசாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோர் மட்டும் அழகிரியை சந்தித்து சிறிது நேரம் பேசிவிட்டுச் சென்றனர்.

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, கோபாலபுரம் இல்லத்திற்கு செல்லும் அழகிரி, கருணாநிதியைச் சந்தித்து பேசாமல் தவிர்த்து வந்தார். அதேபோல் தற்போதும், நேரில் சந்தித்தும், கருணாநிதியுடன் அழகிரி பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விகடன்.com

கருத்துகள் இல்லை: