செவ்வாய், 21 ஜூன், 2016

தெலுங்கு மலையாளம் ஓடியா கன்னடம் எல்லாம் செம்மொழிகளாம் ! மத்திய அரசின் தமிழ் மொழிக்கு எதிரான யுத்தம்?

சென்னை, தெலுங்கு, மலையாளம், ஒடியா, கன்னடம் ஆகிய மொழிகளுக்கு எந்த அடிப்படையில் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது? என்பதற்காக ஆதார ஆவணங்களுடன் மத்திய அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், மூத்த வக்கீல் ஆர்.காந்தி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- செம்மொழி உலகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இதில், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ, தமிழ், சமஸ்கிருதம், சீனம் ஆகிய மொழிகளுக்கு மட்டுமே செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த, இலக்கண, இலக்கிய நூல்கள் இருக்கும் மொழிகளுக்கு மட்டுமே இந்த அந்தஸ்து வழங்கப்படுகின்றன.


இந்த தகுதிகள் இல்லாததால், உலகில் பழமையான மொழிகள் என்று கூறப்படும் அரபிக், பெர்சியன் ஆகிய மொழிகளுக்கு கூட செம்மொழி அந்தஸ்து வழங்கப்படவில்லை. இந்த நிலையில், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிக்கு கடந்த 2005-ம் ஆண்டும், மலையாளத்துக்கு 2013-ம் ஆண்டும், ஒடியா மொழிக்கு 2014-ம் ஆண்டும் மத்திய அரசு செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளது.

ரத்து செய்ய வேண்டும்

மொழி வளமை, இலக்கண, இலக்கிய பாரம்பரியம் உள்ளிட்ட எந்த ஒரு தகுதியும் இல்லாத மொழிகளுக்கு எல்லாம் தன் விருப்பப்படி மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கி வருகிறது. எனவே, இந்த மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இலக்கண, இலக்கியங்கள்

மனுதாரரான மூத்த வக்கீல் ஆர்.காந்தி ஆஜராகி, ‘தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்கள் 2 ஆயிரம் ஆண்டு பழமையானவை. இதுபோல் பழமையான இலக்கண, இலக்கியங்கள் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா போன்ற மொழிகளில் இல்லை. அவை இருந்தால், இந்த கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்யலாம். நானும், உடனே திரும்ப பெற்றுக்கொள்கிறேன். மேலும், நான் பிற மொழிகளுக்கு எதிரானவன் கிடையாது. அதே நேரம், தமிழில் அனைத்து சொற்களும் உள்ளன. பிறமொழி சொல் இல்லாமல் தமிழை சிறப்பாக பயன்படுத்தலாம். ஆனால், சமஸ்கிருத வார்த்தைகள் இல்லை என்றால், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளே இல்லை. எனவே, இந்த மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது தவறு. அதை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.

விவசாயம்

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன், ‘பிறமொழி கலந்துவிட்டால், அதற்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்க முடியாது என்று மனுதாரர் கூறுகிறார். ஆனால், விவசாயம் என்ற சமஸ்கிருத வார்த்தை, தமிழில் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது’ என்று கூறினார்.

அப்போது இடைமறித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ‘விவசாயம் என்பது தமிழ் சொல் அல்ல. அது சமஸ்கிருத சொல்தான். ஆனால், இந்த தொழிலை குறிப்பிட தமிழில் சொல் இல்லை என்று கூற முடியாது. உழவு என்ற தமிழ் சொல் உள்ளது’ என்று கூறினார்.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘இந்த வழக்கை நாங்கள் 13-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அப்போது, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு எந்த அடிப்படையில் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது? என்பதற்காக ஆதார ஆவணங்களுடன் மத்திய அரசு சார்பில் தகுந்த உயர் அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டார்கள்  dailythanthi.com

கருத்துகள் இல்லை: