செவ்வாய், 21 ஜூன், 2016

100 சதவீத அன்னிய முதலீடுக்கு அனுமதி .... For Sale?

புதுடெல்லி, சில முக்கிய துறைகளில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் இந்தியாவில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். 100 சதவீத அன்னிய முதலீடு டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் முக்கிய சீர்திருத்த முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி விமான சேவை, உணவு பொருட்கள் உற்பத்தி மற்றும் தயாரிப்பு ஆகியவற்றில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  தவிர ராணுவம், மருந்து, கால்நடை வளர்ப்பு போன்ற துறைகளில் அன்னிய முதலீட்டுக்கான நிபந்தனைகளை எளிதாக்கியது.


இதன் மூலம் அன்னிய நேரடி முதலீடு இந்தியாவில் மிகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியதாவது:-

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்

அன்னிய நேரடி முதலீட்டில் அரசு கொண்டு வந்த முக்கிய சீர்திருத்த முடிவுகள் உயர்மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் மத்திய அரசு அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்து உள்ளது.

பெரும்பாலான துறைகளுக்கு எளிதில் அனுமதி கிடைத்துவிடும். இதனால் உலகில் அன்னிய முதலீட்டுக்கு ஏற்ற வகையில் திறந்த பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும். இந்த மாற்றம் வேலைவாய்ப்புக்கு உத்வேகம் அளிப்பதுடன், வேலைவாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும்.

அன்னிய முதலீட்டுக்கு மிகவும் உகந்த முதல் நாடாக இந்தியாவை பல்வேறு சர்வதேச முகமைகள் மதிப்பிட்டு இருக்கின்றன. தவிர, 2015-16-ம் நிதி ஆண்டில் மட்டும் இந்தியாவுக்கு மிக அதிக பட்சமாக 55½ லட்சம் பில்லியன் அமெரிக்க டாலர்(ரூ.3½ லட்சம் கோடி) அன்னிய முதலீடு வந்துள்ளது.

இவ்வாறு மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

அன்னிய முதலீடு அதிகரிக்க அனுமதி கொடுத்தது பற்றி மற்ற தலைவர்களின் கருத்து வருமாறு:-

மத்திய வர்த்தக மந்திரி நிர்மலா சீதாராமன்:-

உந்து சக்தி

அன்னிய முதலீட்டுக்கான விதிமுறைகள் எளிதாக்கப்பட்டு இருப்பதால் அன்னிய நேரடி முதலீட்டில் புதிய தெளிவு கிடைக்கும். இதன் காரணமாக இந்தியாவில் தொழில் செய்வது எளிதாக அமையும். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு உந்து சக்தியும் கிடைக்கும். வேலை வாய்ப்புகளும் பெருகும். ஏற்றுமதி மற்றும் மேக் இன் இந்தியா திட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டு இருக்கிறது.

பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீடு முறை எளிதாக்கப்பட்டு இருப்பதால் பாதுகாப்பு அல்லது ராணுவ விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்து கொண்டிருப்பதாக அர்த்தம் கிடையாது. அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்ட பிறகே இதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. திட்டத்துக்கான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கும்போது, அனைத்தையும் ஆய்வு செய்வோம்.

உணவு பொருட்கள் உற்பத்தியில் நவீன தொழில் நுட்பம் மூலம் நமது விவசாயிகள் பயன்பெறுவார்கள். இனி உணவுப் பொருட்கள் அழுகிப்போய்விடும் என்ற கவலையும் விவசாயிகளுக்கு இருக்காது.

இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பான ‘அசோசெம்’ தலைமை பொதுச் செயலாளர் டி.எஸ்.ராவத்:-

நவீனதொழில் நுட்பம் வரும்

மத்திய அரசின் முடிவை வரவேற்கிறோம். அன்னிய நேரடி முதலீட்டில் மத்திய அரசின்விதிமுறை தளர்வால் அதிக அளவு முதலீடு நமக்கு கிடைக்கும். இது, பாதுகாப்பு துறையிலும் அதிநவீன தொழில் நுட்பங்களைக் கொண்டு வரும்.

விதிமுறைகள் தளர்வால் இந்திய மருந்து துறைக்கும் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் குவியும். இதன் மூலம் இந்த துறைகளில் தன்னிறைவு பெறவேண்டும் என்கிற இந்தியாவின் கனவு நனவாகும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்:-

உள்நாட்டு முதலீடுதான் தேவை

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் பதவியில் விடைபெற இருக்கும் நேரத்தில் பயத்தின் காரணமாக மத்திய அரசு இந்த முடிவை எடுத்து இருக்கிறது. எங்களுடைய வர்த்தக விவகாரங்கள் மென்மையாகவே இருக்கின்றன என்பதை காட்டிக் கொள்வது போல் இது உள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கு அன்னிய நேரடி முதலீடு என்னும் மந்திரக் கோலை மட்டுமே இந்த அரசு நம்புகிறது. இதை நாங்கள் எதிர்க்கிறோம். எங்களைப் பொறுத்தவரை நாட்டின் உண்மையான வளர்ச்சி உள்நாட்டு முதலீட்டில்தான் இருக்கிறது.

அன்னிய நேரடி முதலீட்டை பா.ஜனதா எப்போதும் எதிர்த்தே வந்து இருக்கிறது. ஆனால் இப்போது ஒவ்வொரு துறையிலும் அவர்கள் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கின்றனர். இது தொடர்பான விரிவான அறிக்கையை நாளை(இன்று) காங்கிரஸ் வெளியிடும்.

மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய நலனுக்கு எதிரானது

மத்திய அரசின் இந்த முடிவு நிச்சயமாக இந்தியாவின் நலன்களுக்கானது அல்ல. எதிரானது. இது நமது உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் இறையாண்மை விஷயங்களில் மிகவும் தீவிரமான கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

அண்மையில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் பாதுகாப்பு துறையில் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில்தான் அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு இருக்கின்றன. இந்தியாவில் இருந்து அதிக லாபத்தை அமெரிக்கா அறுவடை செய்யும் நோக்கத்துடனும், உலக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தில் இருந்து அமெரிக்கா தங்களை விடுவித்துக் கொள்ளவுமே இது உதவும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். dailyathanthi.com

கருத்துகள் இல்லை: