திங்கள், 14 ஆகஸ்ட், 2023

நீட் தோல்வி: மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தற்கொலை!

மின்னம்பலம்  - Selvam  : நீட் தோல்வி: மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தற்கொலை!
நீட் தேர்வு தோல்வியால் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது தந்தை செல்வசேகர் நேற்று (ஆகஸ்ட் 13) இரவு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் செல்வசேகர். புகைப்படக்காரரான இவரது மகன் ஜெகதீஸ்வரன் 2020-ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்து நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார்.


இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததால் மிகுந்த மன உளைச்சலில் ஜெகதீஸ்வரன் இருந்துள்ளார். இதனால் மூன்றாவது முறையாக நீட் தேர்வுக்கு தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்ததுள்ளார்.
தன்னுடன் பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவர்கள் அடுத்தடுத்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்ததால், மாணவர் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வுக்கு தொடர்ந்து படிக்கலாமா என்ற மனக்குழப்பத்தில் இருந்துள்ளார். இந்தநிலையில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்தநிலையில் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்துகொண்டதால் மன வருத்தத்தில் இருந்த அவரது தந்தை செல்வம் நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை கைப்பற்றிய சிட்லப்பாக்கம் காவல்துறையினர் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். நீட் தேர்வால் மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

கருத்துகள் இல்லை: