ஞாயிறு, 10 அக்டோபர், 2021

தஞ்சாவூர்: பச்சிளம் குழந்தை மீட்பு - கண்ணீர் மல்க காலில் விழுந்து நன்றி தெரிவித்த பெற்றோர்

  puthiyathalaimurai.com  -  sharpana :  தஞ்சாவூர் மாவட்டம் பர்மா காலனியை சேர்ந்த குணசேகரனின் மனைவி ராஜலட்சுமிக்கு ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடந்த 5ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தாயும் - சேயும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தாய்க்கு உதவி செய்வது போல் நடித்த ஒரு பெண், நேற்று காலை குழந்தையை கட்டைப் பையில் போட்டுக்கொண்டு கடத்திச் சென்றுள்ளார். இதுதொடர்பான புகாரை அடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, வழி நெடுகிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். குழந்தையை கடத்திச் சென்ற பெண் பட்டுக்கோட்டையில் இருப்பதை அறிந்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.
விசாரணையில் குழந்தையை கடத்தியவர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விஜி என்பதும், மூன்றாவது கணவரிடம் குழந்தையை காட்டி, அவரது சொத்துக்களை பெறுவதற்காக கடத்தியதும் தெரியவந்தது. குழந்தையை பத்திரமாக மீட்ட காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கண்ணீர் மல்க குழந்தையை பெற்றுக்கொண்ட பெற்றோர், காவல்துறையினரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


கருத்துகள் இல்லை: