வெள்ளி, 31 ஜனவரி, 2020

இரும்புக் கம்பி சித்ரவதை; 2-வது திருமணம்?!’- கேரளப் பெண்ணின் புகாரால் சிக்கிய குமரி அதிமுக பிரமுகர்

நளினகுமாரி, ஷாஜின் காந்தி திருமணத்தின்போதுஅ.தி.மு.க பிரமுகர் மீது புகார் அளித்த நளினகுமாரிvikatan - சிந்து ஆர் : திருமணம் ஆன அன்று இரவு அவரது போனுக்கு ஒரு பெண் மெசேஜ் அனுப்பியதைப் பார்த்ததும் அவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதைப் புரிந்துகொண்டேன். கேரள மாநிலம் பால்ராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் மகள் நளினகுமாரி (36). இவரும் சுசீந்திரம் அக்கரை பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம் பெண்கள் மாவட்ட துணைச் செயலாளர் ஷாஜின் காந்தியும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இதற்கிடையில், ஷாஜின் காந்தி வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும் அவர் தன்னை தாக்கியதில் கை உடைந்துவிட்டதாகவும் நளினகுமாரி நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து நளினகுமாரி கூறுகையில், ``திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரம் எனது பூர்வீகம். நாகர்கோவிலில் உள்ள என் அத்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் 2012-ம் ஆண்டு அவரை பார்ப்பதற்காக வந்தேன். அப்போது சுசீந்திரம் அக்கரையைச் சேர்ந்த ஷாஜின் காந்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி விவகாரத்து ஆகியிருந்தது பற்றி அவரிடம் கூறினேன். உன் கடந்தகால வாழ்க்கையைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்றார். பின்னர் அவர் கடைகள் ஏலம் எடுக்க என்னிடம் பணம் வாங்கினார். பின்னர் அவர் என்னை முறைப்படி பெண் கேட்டார். இரண்டு வீட்டாரும் சம்மதித்ததால் 2013-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி கேரளத்தில் என் அத்தை வீட்டில் வைத்து நிச்சயம் நடந்தது. அதன்பின்னர் இந்துவான நான் கிறிஸ்துவ மதத்துக்கு மாறினால்தான் திருமணம் செல்லும் என அவரது குடும்பத்தினர் கூறினர். அதன்படி நான் நாகர்கோவிலில் ஒரு சர்ச்சில் வைத்து ஞானஸ்தானம் எடுத்து மதம் மாறினேன். என் பெயரை ஆனி லதா என மாற்றிக்கொண்டேன். பின்னர் சுசீந்திரம் அக்கரை சர்ச்சில் வைத்து 16.9.2013-ல் எங்கள் திருமணம் நடந்தது. திருமணம் ஆன அன்று இரவு அவரது போனுக்கு ஒரு பெண் மெசேஜ் அனுப்பியதைப் பார்த்ததும் அவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதைப் புரிந்துகொண்டேன். மறுநாள் நான் அதுபற்றி கேட்டதற்கு என்னை அடித்துக் காயப்படுத்தினார்.



எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்த நளினகுமாரி



எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்த நளினகுமாரி
அதன் பிறகு தினமும் என்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் காயப்படுத்தி வந்தார். 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் என்னை இரும்புக் கம்பியால் அடித்ததில் கை எலும்பு உடைந்துவிட்டது. அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவிட்டு பின்னர் கேரள மாநிலம் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டேன். நான் சிகிச்சையில் இருக்கும்போது 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளது எனக்குத் தெரியவந்தது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன்" என்றார்.




இதுகுறித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய துணைத்தலைவருமான ஷாஜின் காந்தியிடம் பேசினோம், ``முதல் திருமணம் ஆனதை என்னிடம் நளினகுமாரி மறைத்துவிட்டார். நான் இரண்டாவது திருமணம் செய்ததாக கூறுவது உண்மையில்லை. அவர் என்னை விட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்றுவிட்டார். இப்போது வேண்டுமென்றே புகார் அளித்துள்ளார். இதை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்" என்றார்.

கருத்துகள் இல்லை: